ஒரே நேரத்தில் சரிந்த 10 இளைஞர்கள்.. பாவம் உயிரே போச்சு.. மாரடைப்பு அதிகரிக்க உண்மையில் என்ன காரணம்
சென்னை: இப்போது இளைஞர்கள் மத்தியில் மாரடைப்பு அதிகரித்து வரும் நிலையில், அதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
குஜராத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நவராத்திரி விழாவின் போது கர்பா நிகழ்ச்சியின் போது குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் அத்தனை பேரும் மாரடைப்பால் உயிரிழந்த சோக நிகழ்வு அரங்கேறியுள்ளது.

இதில் உயிரிழந்தோர் அனைவரும் பதின்ம வயதினர் மற்றும் நடுத்தர வயதுடையவர்கள் என்பது மற்றொரு ஷாக் தகவலாகும். அதிலும் பரோடா பகுதியில் வெறும் 13 வயது சிறுவன் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
மாரடைப்பு: நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை, கர்பா நடனமாடிக் கொண்டிருந்த போது அகமதாபாத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்தார். அதேபோல், கபத்வாஞ்ச் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனும் கர்பா நடனமாடிக் கொண்டிருந்த போது உயிரிழந்தார். அந்த ஒரு நாளில் மட்டும் குஜராத் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் இதே பலருக்கும் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
24 மணி நேரத்தில் 10 பேர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள் மற்றும் பதின்ம வயதைச் சேர்ந்தவர்கள் தான். குஜராத்தில் நவராத்திரி தொடங்கியது முதல் மொத்தம் 521 பேர் இதய பிரச்சினைகளுக்காக ஆம்புலன்ஸை அழைத்துள்ளனர். அதேபோல 609 பேர் மூச்சுத் திணறல் என ஆம்புலன்ஸை அழைத்துள்ளனர். முன்பு 40 வயதைக் கடந்தவர்களுக்கும் இணை நோய் உள்ளவர்களுக்கும் மட்டுமே ஏற்பட்ட மாரடைப்பு இப்போது அனைத்து தரப்பினருக்கும் ஏற்படுகிறது.
இளைஞர்கள்: இப்போது மாரடைப்பு ஏற்படுவோரில் 5 பேரில் ஒருவர் 40 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் என்பது அதிர்ச்சி தரும் ஒரு தகவலாகும். 2000க்கு பிறகு இளைஞர்கள் மத்தியில் மாரடைப்பு ஏற்படுவது தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கிறது. ஏன் இப்போது இளைஞர்கள் மத்தியில் அதிகம் மாரடைப்பு ஏற்படுகிறது என்பது குறித்தும் அதை எப்படித் தடுக்கலாம் என்பது குறித்தும் பார்க்கலாம்.
ஒரே இடத்தில் அதிகப்படியான நேரம் அமர்ந்து வேலை செய்யும் மோசமான வாழ்க்கை முறை, குடிப்பழக்கம் மற்றும் புகைபிடித்தல், உடல் பருமன், மன அழுத்தம், உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் ஆகியவை தான் மாரடைப்பு ஏற்பட முக்கிய காரணமாகும். இளைஞர்கள் மத்தியில் புகைபிடித்தல், உடல் பருமன் அதிகரிப்பதே இதய பிரச்சினையை அதிகமாக்குகிறது.
என்ன காரணம்: இதயம் தான் மனித உடலின் மிக முக்கிய உறுப்பாகும்.. உடலின் அனைத்து பகுதிகளுக்கும் ஆக்சிஜனை இதயமே அனுப்புகிறது. ரத்தம் செல்லும் தமனிகளில் கொழுப்பு சேரும் போது அதில் அடைப்பு ஏற்படுகிறது. அது ரத்த ஓட்டத்தைப் பாதிக்கும் போது மாரடைப்பு ஏற்படுகிறது.
தடுப்பது எப்படி: நார்ச்சத்து நிறைந்த சரிவிகித உணவைச் சாப்பிட வேண்டும்.. சோடியம் மற்றும் உப்பு நுகர்வு குறைக்க வேண்டும்.. துரித உணவுகளைத் தவிர்க்கவும்.. உங்கள் ரத்த சர்க்கரை அளவு, ரத்த அழுத்த அளவுகள் மற்றும் கொலஸ்ட்ரால் அளவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். புகைபிடிப்பதை முழுமையாக விட்டு விடுங்கள். புகை பிடிப்போர் அருகிலும் செல்ல வேண்டாம். தினசரி குறைந்தது 20 முதல் 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
இதையெல்லாம் சரிவரச் செய்து வந்தாலே போதும் மாரடைப்பிற்கான ஆபத்தை நாம் பெரும்பகுதி தவிர்த்துவிடலாம் என்றே மருத்துவர்கள் கூறுகிறார்கள். இது எந்தவொரு மருத்துவ ஆலோசனையும் இல்லை. உடலில் எதாவது பிரச்சினை வந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.












Click it and Unblock the Notifications