காய்ச்சல், சளி.. தீவிரமாக பரவும் ப்ளூ.. ஆனால் இந்த மருந்தை மட்டும் கண்டிப்பா எடுக்காதீங்க.. வார்னிங்
உதாரணமாக உடலில் சிறுநீரக குழாய் தொற்று எல்லாம் ஏற்படும் பட்சத்தில் ஆண்டிபயாடிக் எடுத்தால் அப்போது அதன் பவர் கம்மியாக இருக்கும்.
சென்னை: இந்தியாவில் ப்ளூ காய்ச்சல் பரவி வரும் நிலையில், மக்கள் குறிப்பிட்ட சில மருந்துகளை எடுக்க கூடாது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் இருக்கும் மக்கள் இடையே திடீரென ப்ளூ காய்ச்சல் ஒன்று பரவிக்கொண்டு இருக்கிறது. இது Influenza A subtype H3N2 வைரஸ் என்று இந்திய மருத்துவ கழகம் தெரிவித்து உள்ளது. இந்தியாவில் மக்கள் பலருக்கும் திடீரென காய்ச்சல் ஏற்படுவதும், கடுமையான உடல் வலி ஏற்படுவதும் அதிகரித்து உள்ளது. இதன் அறிகுறிகள் என்னென்று இந்திய மருத்துவ கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
சாதாரண சீசன் காய்ச்சல் போல இல்லாமல் இந்த காய்ச்சல் காரணமாக மக்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அதோடு இது இயல்பு வாழ்க்கையை முடக்கும் விதமாக அமைந்து உள்ளது.

காய்ச்சல் எப்படி ஏற்படுகிறது?
சிலருக்கு இந்த காய்ச்சல் போனதும் மீண்டும் 2 வாரத்தில் வருகிறது. சிலருக்கு 4 வாரங்கள் கூட இந்த காய்ச்சல் நீடிப்பதாக கூறப்படுகிறது. இதனால் மருத்துவமனைக்கு பலரும் கூட்டம் கூட்டமாக செல்கிறாரக்ள். அதாவது அவ்வளவு எளிதாக இந்த காய்ச்சல் குணமாவது இல்லை. பலரும் இது கொரோனாவாக இருக்குமோ என்று நினைத்துக்கொள்கிறார்கள். இந்த நிலையில்தான் இது கொரோனா இல்லை, இது Influenza A subtype H3N2 வைரஸ் என்று இந்திய மருத்துவ கழகம் தெரிவித்து உள்ளது. சளி, இருமல், அதிக காய்ச்சல், உடல்வலி, தலைவலி, தும்மல், மூக்கு அடைப்பு , தொண்டை புண், கண்களில் நீர் வடிதல், ஆகியவை இதன் அறிகுறிகள் ஆகும்.

ஆன்டிபயாட்டிக்
இந்த காய்ச்சல் நீண்ட நாட்கள் ஆகியும் போகவில்லை என்று சிலர் ஆன்டிபயாட்டிக்குகளை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். இந்திய மருத்துவ அமைப்பின் கூற்றுப்படி, " இந்த தொற்று பொதுவாக ஐந்து முதல் ஏழு நாட்கள் வரை நீடிக்கும். பெரும்பாலும் மூன்று நாட்களுக்குள் காய்ச்சல் மறைந்துவிடும், ஆனால் இருமல் மூன்று வாரங்கள் வரை நீடிக்கும். பெரும்பாலான H3N2 இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் இப்படியான பாதிப்பையே ஏற்படுத்தும்" என்று தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில்தான் ஆன்டிபயாட்டிக்குகளை பயன்படுத்த கூடாது என்று அவர்கள் கூறி உள்ளனர். இதற்கான காரணங்களையும் வெளியிட்டு உள்ளனர்.

ஆன்டிபயாட்டிக்குகள் என்றால்
அசித்ரோமைசின்
அமோக்ஸிக்லாவ்
அமோக்ஸிசிலின்
நார்ஃப்ளோக்சசின்
சிப்ரோஃப்ளோக்சசின்
ஆஃப்லோக்சசின்
லெவ்ஃப்ளோக்சசின்
ஐவர்மெக்டின் போன்ற மருந்துகளை பயன்படுத்த கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

ஏன் இப்படி
இந்த அறிவுரையை மருத்துவ கழகம் வழங்க முக்கிய காரணம் உள்ளது. காய்ச்சல் போகவில்லை என்று பலர் ஆண்டிபயாடிக் எடுக்கிறார்கள். ஆனால் இப்போது எடுத்தால் அந்த ஆண்டிபயாடிக் மருந்துகளுக்கு உடல் ஏற்றதாக மாறிவிடும். வரும் நாட்களில் எதாவது வைரஸ் அல்லாத மற்ற பாக்ட்ரியா பாதுகாப்பு, எதிர்ப்பு சக்தி குறைவு காரணமாக பாதிப்புகள் ஏற்பட்டால், அப்போது ஆண்டிபயாடிக் பயன்படுத்தினால் கேட்காது. உதாரணமாக உடலில் சிறுநீரக குழாய் தொற்று எல்லாம் ஏற்படும் பட்சத்தில் ஆண்டிபயாடிக் எடுத்தால் அப்போது அதன் பவர் கம்மியாக இருக்கும். இதனால் இந்த மருந்துகளை பயன்படுத்த வேண்டாம், என்று இந்திய மருத்துவ கழகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications