பிரதமர் வேட்பாளராக மோடி! ஏற்க மறுத்து அடம் பிடிக்கும் அத்வானி! ஆதரவுக்காக போராடும் ராஜ்நாத்!!
டெல்லி: குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி தொடர்ந்தும் மறுத்து பிடிவாதம் காட்டி வருகிறார். இதனால் நரேந்திர மோடி பிரதமராக அறிவிப்பது ஓரிரு நாட்கள் தள்ளிப் போகும் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக்கியே தீருவது என்பதில் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கிறது. பந்தை தமது எல்லைக் கோட்டிலிருந்து பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் பக்கம் தட்டிவிட்டிருக்கிறது அந்த இயக்கம்.

இதனால் விரைவில் முடிவெடுத்து அறிவிக்க வேண்டிய நெருக்கடியில் ராஜ்நாத் சிங் இருக்கிறார். இந்த நெருக்கடிக்குத் தீர்வு காணும் வகையில் மோடியை எதிர்க்கும் அத்வானியை இன்று பகலில் சந்தித்து ஆலோசனை நடத்தினார் ராஜ்நாத்சிங்.
அத்வானியை சமாதானப்படுத்திவிட்டால் சுஷ்மா ஸ்வராஜ், முரளி மனோகர் ஜோஷியையும் சமாதனப்படுத்திவிடலாம் என்பது ராஜ்நாத்தின் கணக்கு. இவர்களைப் பொறுத்தவரையில் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் டெல்லி மாநில சட்டசபை தேர்தல் முடிந்த பிறகு மோடியை அறிவிப்பது பற்றி முடிவெடுக்கலாம் என்பதுதான் கருத்து. ஆனால் ஆர்.எஸ்.எஸ். இதனை ஏற்கவில்லை.
இன்றைய சந்திப்பின் போதும் அத்வானி இதனையே வலியுறுத்தியிருக்கிறார். இதனால் ராஜ்நாத்சிங் மேற்கொண்ட முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவரையும் நேரில் சந்தித்து மோடிக்காக ஆதரவு திரட்டும் படலத்தை மேற்கொண்டு வருகிறார். இதில் வெற்றி பெறும் நிலையில் நாளை மறுநாள் நரேந்திர மோடியை அவர் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கக் கூடும்.












Click it and Unblock the Notifications