எங்களுக்கு அதிகார வர்க்கத்திடம் இருந்து சுதந்திரம் வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் சிபிஐ!
டெல்லி: வழக்கு விசாரணையின் போது தங்களுக்கு அதிகாரவர்க்கத்திடம் இருந்து சுதந்திரம் அளிக்க வேண்டும் என்று சி.பி.ஐ. சார்பில் உச்சநீதிமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழலை 33 அதிகாரிகளை கொண்ட சி.பி.ஐ. குழு விசாரித்து வருகிறது. இந்த விசாரணையில் தொய்வு ஏற்பட்டதை தொடர்ந்து சி.பி.ஐ.க்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
இதைத்தொடர்ந்து தங்களுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்க வேண்டும் என்று கோரி சி.பி.ஐ. சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் சி.பி.ஐ. இயக்குநருக்கு கூடுதல் நிர்வாகம் மற்றும் நிதி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
இதற்கு மத்திய அரசின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது சி.பி.ஐ. சார்பில் ஆஜரான அமரேந்திர சரண், நிர்வாக ரீதியிலான செயல்பாடுகளில் ஒவ்வொரு கட்டத்திலும் பல்வேறு தடைகளை சி.பி.ஐ. சந்திக்க வேண்டி உள்ளது. சி.பி.ஐ. தன்னிச்சையாக சுதந்திரமாக செயல்படுவதில் பல்வேறு இடையூறுகள் உள்ளன. அரசின் செயலாளருக்கு உரிய அதிகாரங்களை சி.பி.ஐ. இயக்குனருக்கு வழங்க மத்திய அரசு விரும்பவில்லை. எனவே அதிகாரவர்க்கத்திடம் இருந்து சி.பி.ஐ.க்கு சுதந்திரம் வேண்டும் என்றார்.
இதை ஏற்ற நீதிபதிகள் இது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் ஜி.இ.வாகன்வதியை கேட்டுக்கொண்டனர்.