பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் இடைவிடாத யுத்தம்.. என்ன நடக்கிறது காஸா முனையில்? முழு விவரம்
ஜெருசலேம்: 2-ம் உலகப் போருக்குப் பின்னர் ஜெர்மன் உள்ளிட்ட நாடுகளில் பல லட்சக்கணக்கான யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த யூதர்களுக்கான தனி ஒரு நாடாக இஸ்ரேல் உருவானது. இந்த இஸ்ரேல் என்பது பாலஸ்தீனர்களின் வரலாற்று தாயகத்தை கூறுபோட்டு வல்லாதிக்க சக்திகளால் உருவாக்கப்பட்ட ஒரு நாடு. இதனால்தான் இஸ்ரேல்- பாலஸ்தீன யுத்தம் என்பது தலைமுறை தலைமுறைகளாக தொடருகின்றன.
பாலஸ்தீனத்தின் ஜெருசலேம் சர்வதேச நகரமாக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தின் மிக முக்கியமானது காஸா முனை பகுதி.பாலஸ்தீனத்தின் காஸா முனை பகுதியில் இஸ்ரேல் நடத்திய கொடூர வான்வழித் தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 250க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இஸ்ரேலின் தாக்குதலில் காஸா பகுதியில் உள்ள கட்டிடங்கள், பாலஸ்தீனர்களின் அகதி முகாம்கள் நிர்மூலமாகி உள்ளன. இஸ்ரேல் மீதான ராக்கெட் தாக்குதல்களுக்கு பதிலடியாகவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக நியாயம் கற்பிக்கப்படுகிறது. பாலஸ்தீனத்தின் இஸ்லாமிக் ஜிஹாத் அமைப்புதான் இத்தகைய தாக்குதல்களை நடத்துகிறது என்பது இஸ்ரேலின் குற்றச்சாட்டு. ஆனால் இஸ்லாமிக் ஜிஹாத்-ன் தாக்குதல்களை இஸ்ரேல் வெற்றிகரமாக முறியடித்துவிட்டதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலின் தாக்குதல்களாள் பாலஸ்தீன பகுதிகள் மீண்டும் பற்றி எரிகின்றன. இதனைத் தொடர்ந்து ஐநா மற்றும் எகிப்து உள்ளிட்டவை இருதரப்பு இடையே அமைதி முயற்சிகளை தீவிரமாக்கி உள்ளன. களத் தகவல்கள் அடிப்படையில் காஸா பிராந்தியத்தில் அரசு கட்டிடங்கள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், பல்கலைக் கழகங்கள், ஐநா நிறுவன வளாகங்கள், அகதி முகாம்கள் ஆகியவைதான் இஸ்ரேலின் தாக்குதல் அபாயத்தில் சிக்கி இருப்பவை.
காஸா முனை என்பது பாலஸ்தீனத்தின் ஒரு அங்கம். இஸ்ரேலுடன் எல்லைகளைக் கொண்டது. உலகிலேயே குறுகிய நிலப்பரப்பில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் அடர்த்தியாக வாழும் ஒரு நிலப்பரப்பு. இப்பகுதியில் 2.1 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். கடந்த 14 ஆண்டுகளாக இஸ்ரேல் நடத்தி வரும் கொடூர தாக்குதல்களில் காஸா முனை பகுதியில் மட்டும் பல்லாயிரக்கணக்கான அப்பாவி பாலஸ்தீனர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த காஸா பிராந்தியமானது வடக்கு காஸா, காஸா நகரம், டெய்ர் இ பலாஹ், கான் யூனிஸ், ரஃபா ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது.வடக்கு காஸாவில் 4,30,000; காஸா நகரத்தில் 7,31,000; டெய்ர் இ பலாஹ்- நகரில் 3,10,000, கான் யூனிஸ் 4,26,000 மற்றும் ரஃபாவில் 2,67,000 [பொதுமக்கள் வசிக்கின்றனர். இந்த 5 நகரங்களை மையமாகக் கொண்டு அர சு நிர்வாகம் இயங்கி வருகிறது. இதன் மொத்த அகலம் 365 சதுர கிலோ மீட்டர். மொத்த நீளம் வெறும் 41 கி.மீ.தான். ரஃபா பகுதியில் இருந்து வடக்கு காஸாவுக்கு ஒரு மணிநேரத்துக்குள் பயணமாகிவிட முடியும்.
கடந்த 2008-ம் ஆண்டு முதல் இஸ்ரேல், 4 யுத்தங்களை பாலஸ்தீனம் மீது நடத்தி இருக்கிறது. இந்த 4 யுத்தங்களிலும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். காஸா மீதான இஸ்ரேலின் கடைசி யுத்தத்தில் மட்டும் 261 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 67 பேர் பிஞ்சு குழந்தைகள். மொத்தம் 2,200 பேர் படுகாயமடைந்துள்ளனர்... இவை அனைத்தும் ஐநாவின் புள்ளி விவரங்கள். காஸா பகுதி மீதான கடந்த ஆண்டின் 11 நாட்கள் இடைவிடாத இஸ்ரேலின் தாக்குதல்களில் 46 பள்ளிக்கூடங்கள் உட்பட 51 கல்வி நிறுவனங்கள் நிர்மூலமாக்கப்பட்டுவிட்டன. இதில் ஐநாவின் அகதிகளுக்கான பயிற்சி மையமும் அடங்கும். காஸாவில் உள்ள இஸ்லாமிக் பல்கலைக் கழகமும் உள்ளடங்கும் என்கிறது ஐநா. கல்வி நிறுவனங்களை மட்டுமின்றி மருத்துவமனைகளையும் இஸ்ரேல் தாக்குதல்கள் அழித்திருக்கின்றன. 6 மருத்துவமனைகள், 11 ஆரம்ப சுகாதார நிலையங்களை அழித்த இஸ்ரேல் தாக்குதல், காஸாவில் இருந்த ஒரே ஒரு கொரோனா பரிசோதனை ஆய்வகத்தையும் அழித்துவிட்டது.
2007-ம் ஆண்டு முதல் சுமார் 15 ஆண்டுகள் காஸா பிராந்தியத்தின் மீது இஸ்ரேல் பொருளாதாரத் தடையை அமல்படுத்தி உள்ளது. இப்பிராந்தியத்தில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 45%. இதுதான் உலகிலேயே மிக அதிகமாகும். 2008-2009-ல் 23 நாட்கள், 2012-ல் 8 நாட்கள், 2014-ல் 50 நாட்கள், 2021-ல் 11 நாட்கள் தொடர் தாக்குதல்கள் அல்லது யுத்தத்தை பாலஸ்தீனத்தின் காஸா மீது கட்டவிழ்த்துவிட்டது இஸ்ரேல்.
இதில் வடக்கு காஸா என்பது இஸ்ரேலுடன் 10 கி.மீ. எல்லையை பகிர்ந்து கொள்கிறது. காஸா முனை என்பது கான்கிரீட் சுவர், மின்வேலிகளால் கட்டமைக்கப்பட்ட எல்லை. காஸா முனையில் இருந்து 1 கி.மீ. தொலைவுக்குள் பாலஸ்தீனர் ஒருவர் ஊடுருவினாலே இஸ்ரேல் ராணுவம் சுட்டுப் படுகொலை செய்துவிடும். இப்பகுதியில் உள்ள மக்கள் சிறப்பு அனுமதி பெற்றுதான் ஜெருசலேம் அல்லது மேற்கு கரை பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு செல்லும் நிலையில் உள்ளனர். ஜெருசலேமில் இருந்து இது 100 கி.மீ. தொலைவில் உள்ளது. ஆனால் இஸ்ரேல் ராணுவ கெடுபிடிகளால் 100 கி.மீ. தொலைவை சென்றடையவே பல மணிநேரமாகிவிடும். காஸா முனையில்தான் மிகப் பெரிய அகதிகள் முகாம் உள்ளது. இங்குள்ள அகதி முகாமில் மட்டும் மொத்தம் 1,14,000 பேர் தங்கி உள்ளனர். 1.4 சதுர கிலோ மீட்டரில்தான் இத்தனை லட்சம் பேர் அகதிகளாக அடைபட்டுள்ளனர்.
காஸா முனையிலேயே மிகப் பெரிய மருத்துவ வசதி காஸா நகர மருத்துவமனையில்தான் உள்ளது. Al Shifa Hospital என்ற இந்த மருத்துவமனையைச் சுற்றிதான் ஐநா அமைப்புகளின் அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாலஸ்தீனத்தின் ஆகப் பெரும் பல்கலைக் கழகங்களும் காஸா நகரில் இம்மருத்துவமனை வளாகத்தை சுற்றியே உருவாக்கப்பட்டுள்ளன. டெய்ர் இ பலாஹ் பிராந்தியமானது, காஸாவின் அதிமுக்கியமான வேளாண் பகுதியாகும். இங்கும் 4 அகதிகள் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்குதான் காஸா பகுதியின் ஒரே ஒரு மின் உற்பத்தி நிலையமும் உள்ளது. இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் கான் யூனிஸ், ரஃபா பிராந்தியங்களும் முக்கியமானவை. இதில் ரஃபா இஸ்ரேலுடன் எல்லையை பகிர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications