கிராம உதவியாளர்கள் நியமனம்.. தமிழ்நாடு அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கிராம உதவியாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், கிராம உதவியாளர்கள் நியமனம் குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. எப்படி தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள், எப்படி மார்க் வழங்கப்படும், எப்படி இண்டர்வியூ நடக்கும் என்பது உள்ளிட்ட நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
விஏஓ எனப்படும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உதவியாக கிராம உதவியாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். வருவாய் கிராமங்களில் விஏஓவுக்கு கீழாக உள்ள இந்த கிராம உதவியாளர்களின் பணி என்பது மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. தமிழகத்தில் தற்போது பல்வேறு கிராமங்களிலும் இந்த உதவியாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.

கிராம உதவியாளர் பணியிடங்கள்
இந்த பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழக அரசின் வருவாய்துறை மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் வருவாய்துறை வெளியிட்டுள்ள அராசணையில் கூறப்பட்டுள்ளதாவது:
கிராம உதவியாளர் பணிக்கான சிறப்பு விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கிராம உதவியாளர் பணி நியமனத்துக்கான தேர்வு முறை மற்றும் மதிப்பெண்கள வழங்குவது தொடர்பாக வழிமுறைகளை வகுத்துள்ளது.
டுவீலர் லைசென்ஸ்
* அதன்படி, கல்வித் தகுதியில், பத்தாம் வகுப்பில் தமிழ் ஒரு பாடமாகக் கொண்டு தேர்வு எழுதப்பட்டிருக்க வேண்டும்.
* மதிப்பெண் பட்டியல் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு 10 மதிப்பெண்கள் வழங்கப்படும். விண்ணப்பதாரர் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், பெறாவிட்டாலும் முழு மதிப்பெண் வழங்கப்பட வேண்டும்.
* பைக் ஓட்டுவதற்கான லைசன்ஸ் வைத்து இருந்தால் அதற்கு தேர்வு நடத்த வேண்டியது இல்லை
* சைக்கிள் அல்லது பைக் ஓட்டுவதற்கான திறன் பெற்றிருந்தால் தேர்வு நடத்த வேண்டும். இதற்கு பத்து மதிப்பெண் வழங்க வேண்டும்.
இண்டர்வியூ எப்படி நடக்கும்?
* தமிழ் வாசிக்கும், எழுதும் திறன் பெற்றிருந்தால், திறனுக்கேற்ப 30 மதிப்பெண் வரை வழங்க வேண்டும். நேர்காணல் குழுவின் முன் வாசித்து, எழுதிக்காட்ட வேண்டும்.
* தொடர்புடைய கிராமத்தில் வசிப்பவராக இருந்தால் 35 மதிப்பெண் வழங்க வேண்டும். அல்லது தாலுகா எல்லைக்குள் வசிப்பவராக இருந்தால் 30 மதிப்பெண் வழங்கப்படும்.
* இண்டர்வியூ என்பது வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், பிற தனி வட்டாட்சியர் ஆகியோரைக் கொண்ட குழுவினரால் நடத்தப்படும்.
* விண்ணப்பதாரரின் ஒட்டுமொத்த செயல்பாட்டுக்கு ஏற்ப குறைந்தபட்சம் 6, அதிகபட்சம் 12 மதிப்பெண் வரை வழங்கலாம். எந்த ஒரு காரணத்தைக் கொண்டும் 6-ஐ விட குறைவாகவோ, 12-ஐவிட அதிகமாகவோ மதிப்பெண் வழங்கக்கூடாது.
கலெக்டர்கள் மேற்பார்வையில்
* கிராம உதவியாளர் நியமனம் தொடர்பான அறிவிப்புகள் உரிய விதிகளை பின்பற்றி வெளியிட வேண்டும். இதனை மாவட்ட கலெக்டர்கள் மேற்பார்வையிட வேண்டும். தேர்வு முறையானது உரிய விதிகளை பின்பற்றி நடைபெற்றுள்ளதை அந்தந்த மாவட்ட கல்டெக்டர்கள் உறுதி செய்ய வேண்டும்.
* அதன்பிறகு, தேர்வுக்கான முடிவுகளை வெளியிட வேண்டும். இந்த விதிகளில் மீறினால் அனைத்து அலுவலர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு வருவாய்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எப்போது அறிவிப்பு வெளியாகும்?
கிராம உதவியாளர்கள் பணியிடங்கள் தேர்வுக்கான விதிமுறைகள், தேர்வு முறைகள் குறித்து வருவாய்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், விரைவில் தமிழகத்தில் காலியாக இருக்க கூடிய கிராம உதவியாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications