குரூப்-4 தேர்வு எழுத போறீங்களா.. கோவையில் உள்ளவர்களுக்கு தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் வாய்ப்பு
கோவை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள 6,244 காலியிடங்களுக்கான குரூப்-4 தேர்வுக்கு தமிழக அரசே இலவசமாக பயிற்சி அளிக்கிறது. இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் - 4 தேர்வுகளை கடந்த மாதம் அறிவித்தது.கிராம நிர்வாக அதிகாரி, இளநிலை உதவியாளர், தட்டச்சர், எழுத்தர், வனக்காவலர், வனக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

2023ல் நடைபெற வேண்டிய தேர்வு தான் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு நடைபெறும் குரூப் 4 தேர்வின் மூலம் 108 விஏஓ பணியிடங்கள், 2,442 இளநிலை உதவியாளர் பணியிடங்கள், சுமார் 1,700 தட்டச்சர் பணியிடங்கள் , வனக்காவலர் பணியிடங்கள் உள்பட மொத்தமாக 6,244 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
குரூப் - 4 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஜனவரி 30-ம் தேதி வெளியிடப்பட்ட நிலையில் பிப்ரவரி 28-ம் தேதி நள்ளிரவுக்கு முன்பாக இந்தத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும் கடைசி நேரத்தில் மொத்தமாக வந்து விண்ணப்பித்தால் சர்வர் பிரச்சனையால் விண்ணப்பிக்க முடியாமல் போகலாம் என்பதையும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
குரூப் 4 தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலமாகவோ, www.tnpscexams.in என்ற இணையதளத்தின் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்திருக்கிறது.. குரூப் தேர்வுக்கான பாடத்திட்டங்கள் குறித்தும் தேர்வுக்கான அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.. பலரும் தனியார் பயிற்சி மையங்களில் சேர்ந்து பயிற்சி பெற தொடங்கி உள்ளனர். வசதி உள்ளவர்கள் அப்படி சேர முடியும் என்றால், வசதி அற்ற ஏழைகளும் இந்த வாய்ப்பை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அரசே மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் இலவசமாக பயிற்சி அளிக்கிறது. இந்த பயிற்சி கோவை மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.. மற்ற மாவட்டத்தினர் அந்தந்த மாவட்டங்களில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தை கேட்டு அறியலாம்.
கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனகாப்பாளர் ஆகிய பதவிகள் அடங்கிய குரூப்-4ல் 6,244 காலியிடங்களுக்கு தேர்வு ஜூன் மாதம் 9ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த தேர்வுக்கு www.tnpsc.gov.in என்ற இணைய தள முகவரி மூலம் வரும் பிப்ரவரி 28-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் பிப்ரவரி 12-ந் தேதி முதல் தொடங்குகிறது. 10-ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் கல்வி தகுதியுள்ள அனைவரும் இந்த வகுப்பில் கலந்து கொள்ளலாம்.
சிறப்பான பயிற்றுனர்களை கொண்டு ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் நடத்தப்படுகிறது. ஸ்மார்ட் போர்டு, இலவச வைபை வசதி, அனைத்து போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் அடங்கிய நூலக வசதி, பயிற்சி கால அட்டவணை, வாரத்தேர்வுகள், முழு மாதிரி தேர்வு போன்றவை நடத்தப்பட உள்ளது. பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் வருகிற பிப்ரவரி 12-ந் தேதி 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வர வேண்டும்" இவ்வாறு கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications