சிஆர்பிஎப் எஸ்ஐ, ஏட்டு பணி.. இந்தி, ஆங்கிலத்தில் மட்டும் எழுத்து தேர்வு.. தமிழகத்தில் எதிர்ப்பு
டெல்லி: சிஆர்பிஎப் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் தலைமை காவலர்களுக்கான தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடக்கும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சிஆர்பிஎப் காவலர் தேர்வை இந்தியாவில் உள்ள மற்ற மொழிகளில் எழுதலாம் என அறிவித்ததை போல், சிஆர்பிஎப் தலைமை காவலர் தேர்வை தமிழில் எழுத மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
சிஆர்பிஎப் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் தலைமை காவலர்களுக்கான தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே எழுத வேண்டும் என்கிற உத்தரவு பிராந்திய மொழிகளை சேர்ந்தவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று பொதுமக்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.
தமிழர்கள் தங்கள் தாய்மொழியில் தேர்வெழுத முடியாது. ஆனால் இந்திக்காரர்கள் அவர்கள் தாய்மொழியில் எழுதலாம் என்பது சரியானது அல்ல என்று டுவிட்டரில் எதிர்ப்பும் எழுந்துள்ளது.

இந்தியா முழுவதும் சிஆர்பிஎப்பில் காலியாக உள்ள சப் இன்ஸ்பெக்டர் மற்றும் தலைமை காவலர் பணிக்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பாணை கடந்த 8ம் தேதி வெளியிடப்பட்டது. இன்று முதல் (மே 10 ம் தொடங்கி) விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எத்தனை பணியிடங்கள்:
சப் இன்ஸ்பெக்டர் (ஸ்டெனோ) பணியிடம்: 27 இடங்கள் ( ஊதியம் எவ்வளவு: 29200-92300 )
தலைமை காவலர்கள்: 227 பணியிடங்கள் (ஊதியம் எவ்வளவு-25500-81100)
சிஆர்பிஎப்பில் காலியாக உள்ள பணிக்கு விண்ணப்பிக்க மே 31ம்தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கணிணி வழி தேர்வுக்கான அட்மிட் கார்டு (ஹால் டிக்கெட்) ஜூலை 15ம் தேதி முதல் டவுன்லோடு செய்யலாம் என்றும், ஜூலை 22 முதல் 28ம் தேதிக்குள் சிஆர்பிஎப் தலைமை காவலர் பணிக்கான கணினி வழித்தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கணினி வழித்தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தியில் தான் நடத்தப்படும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதான் தற்போது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் இந்தியில் தேர்வு எழுத அனுமதிக்கும் போது, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளை தாய்மொழியாக கொண்டவர்களை ஏன் அவரவர் தாய் மொழியில் எழுத அனுமதிக்கக்கூடாது என்று கேள்வி எழுந்துள்ளது.
சிஆர்பிஎப் காவலர் தேர்வை இந்தியாவில் உள்ள மற்ற மொழிகளில் எழுதலாம் என அறிவித்ததை போல், சிஆர்பிஎப் தலைமை காவலர் தேர்வை தமிழில் எழுத மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
முழு அறிவிப்பாணையை செய்தியில் இணைக்கப்பட்டு பிடிஎப் பைலில் பாருங்கள்.













Click it and Unblock the Notifications