இது தெரியாம போச்சே! பிரதமர் திட்டத்தில் இப்படியொரு அரசாங்க வேலையா? எவ்வளவு சம்பாதிக்கலாம் தெரியுமா?
சென்னை: பிரதமர் திட்டத்தின் கீழ் வேளாண்மைத்துறையில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள், இளநிலை பட்டதாரியாகவும் வங்கிகளுடன் இணைந்து செயல்பட்ட நல்ல அனுபம் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அது தொடர்பான விவரம் வருமாறு;

பிரதமர் திட்டம்
தமிழகத்தில் உள்ள தொழில் முனைவோர், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மற்றும் சுய உதவி குழுக்கள் பயன் பெற பாரதப் பிரதமர் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் (PMFME) திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தில் பங்குபெற விருப்பமுள்ள தொழில் முனைவோர், உழவர் உற்பத்தியாளர் மற்றும் சுய உதவி குழுக்களுக்கு உதவி புரிந்திட மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

இரண்டு தவணை
ஒருங்கிணைப்பாளர்கள், குறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை ஊக்குவிக்கும் பொருட்டு விரிவான திட்ட அறிக்கை தயாரித்தல், அதற்கான வங்கிக்கடன் பெற்றிட உதவுதல் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். இவர்களுக்கு PMFME திட்டத்தின் விதிமுறைகளின்படி திட்ட அறிக்கைக்கான கடன் ஒப்புதல் பெறப்பட்டதும் ரூ 10,000/- முதல் தவணையாகவும், வணிக ரீதியான உற்பத்தி துவங்கப்பட்டதும் இரண்டாவது தவணையாக ரூ 10,000/- வழங்கப்படும்.

நல்ல அனுபவம்
ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள், இளநிலை பட்டதாரியாகவும், வேளாண் சார்ந்த நிறுவனங்கள் அல்லது உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் அல்லது சுய உதவி குழுக்கள் ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்றிய முன் அனுபவம் இருக்க வேண்டும் . வங்கிகளுடன் இணைந்து செயல்பட்ட நல்ல அனுபவமுள்ள ஓய்வுபெற்ற அரசு அலுவலர்கள், வங்கி ஊழியர்கள், காப்பீட்டு முகவர்கள், வங்கி மித்ராஸ், ஆலோசனை நிறுவனங்கள், தனிநபர் தொழில் வல்லுநர்கள் ஆகியோரும் விண்ணப்பித்திடலாம் .

கடைசி நாள் 24-ஆம் தேதி
மேலும் விண்ணப்பங்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிட வேண்டும். இதற்கான கடைசி தேதி 24.06.2022 ஆகும். இந்த வாய்ப்பை விருப்பமுள்ள நபர்கள் பயன்படுத்தி பயன்பெறுமாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications