உளவுத்துறையில் வேலை பார்க்க சூப்பர் சான்ஸ்! சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு கல்வி தகுதி தான்
சென்னை: ஐபி (intelligence bureau) எனப்படும் மத்திய உளவுத்துறையில் வேலை பார்க்க சூப்பர் சான்ஸ் கிடைத்துள்ளது. நாட்டின் முக்கியமான பாதுகாப்பு அமைப்பான உளவுத்துறையில் காலியாக உள்ள பாதுகாப்பு உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். சம்பளத்தை பொறுத்தவரை மாதம் ரூ.69 ஆயிரம் வரை வழங்கப்படும்.
ஐபி (intelligence bureau) எனப்படும் மத்திய உளவுத்துறை என்பது நாட்டின் மிக முக்கியமான பாதுகாப்பு அமைப்பாகும். முன்கூட்டியே தகவல்களை திரட்டி நாட்டின் உரிய பாதுகாப்பு அமைப்புகளுடன் தகவல்களை தெரிவிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த அமைப்பில் பணியாற்ற வேண்டும் என்பது பலருக்கும் லட்சியங்களில் ஒன்றாக உள்ளது.

உளவுத்துறையில் ஏற்படும் காலிப்பணியிடங்களை நிரப்ப அவ்வப்போது தேர்வு அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், தற்போது காலியாக உள்ள 455 பாதுகாப்பு உதவியாளர் (மோட்டார் டிரான்ஸ்போர்ட் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வித் தகுதி உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
சென்னை 11, பெங்களூர் 06, ஐதராபாத் 07, டெல்லி 127, மும்பை 15, ஸ்ரீநகர் 20, திருவனந்தபுரம் 09, விஜயவாடா 09, வாரணாசி 07 என 37 நகரங்களில் மொத்தம் காலியாக 455 பணியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து பத்தாம் வகுப்பு முடித்து இருப்பது அவசியம். இலகு ரக வாகன ஓட்ட உரிமம் வைத்து இருக்க வேண்டும். வாகனங்களில் சிறிய பழுதுகளை நீக்கும் திறன் பெற்றிருப்பது அவசியம். லைசன்ஸ் எடுத்த பிறகு ஓராண்டு வாகனம் ஓட்டிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாநிலத்தின் வசிப்பவராக இருத்தல் அவசியம்.
வயது வரம்பு:
18 வயது முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.
சம்பளம் எவ்வளவு?
* தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு ரூ.21,700 முதல் ரூ.69,100/- வரை சம்பளமாக வழங்கப்படும். தேர்வு முறையை பொறுத்தவரை இரண்டு கட்ட தேர்வுகள் நடைபெறும். டையர் 1 மற்றும் டையர் 2 (டிரைவிங் டெஸ்ட் - நேர்முகத்தேர்வு) அடிப்படையில் தேர்வுகள் நடைபெறும்.
* நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் தேர்வு நடைபெறும். தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய நகரங்களில் எழுத்து தேர்வு நடைபெறும்.
தேர்வுக் கட்டணம்:
தேர்வுக்கட்டணமாக ரூ.550 செலுத்த வேண்டும். பெண்கள், EWS, ஓபிசி பிரிவினருக்கு ரூ.650 கட்டணம் ஆகும். ஆன்லைன் வழியாக மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கிய நாள்: 06.09.2025 ஆகும். விண்ணப்பிக்க அவகாசம் முடியும் நாள்: 28.09.2025 ஆகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: Click Here












Click it and Unblock the Notifications