மின் உற்பத்தி கழகத்தில் காலிப்பணியிடங்கள்..டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப முடிவு..வெளியான சூப்பர் தகவல்
சென்னை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் (TANGEDCO) முதல்கட்டமாக 200 தொழில்நுட்ப உதவியாளர் காலிப்பணியிடங்களை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பத் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு ஆணையம் எனப்படும் டி.என்.பி.எஸ்.சியால் நிரப்பப்படுகிறது. குரூப்-1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் அறிவிப்புகள் வெளியாகி ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.

அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற கனவும் படித்து வரும் தேர்வர்கள் லட்சக்கணக்கானோர் இந்த தேர்வுகளை எழுதி வருகிறார்கள். ஆண்டுதோறும் போட்டித்தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இளைஞர்கள் மத்தியில் அரசு வேலை மீதான ஆர்வம் மற்றும் வேலை வாய்ப்புகள் குறைந்து போனது என இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது.
ஆவின், போக்குவரத்து கழகம் உள்ளிட்ட துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களும் டி.என்.பி.எஸ்.சியால் நிரப்பப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் முதல்கட்டமாக 200 தொழில்நுட்ப உதவியாளர் காலிப்பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சியால் நிரப்பபட உள்ளது.
இதற்கான அனுமதியை தமிழக அரசு கொடுத்துள்ளது. இது தொடர்பாக எரிசக்தித் துறைச் செயலர் ரமேஷ் சந்த் மீனா பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: - "நஷ்டத்தில் இயங்கும் அரசு நிறுவனங்கள், நேரடி நியமனம் மூலம் 25-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்பும்போது அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும் என கடந்த ஆண்டு மார்ச் 30-ம் தேதி நிதித்துறை பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அடிப்படையில், 8 ஆயிரம் கள உதவியாளர்கள் காலிப்பணியிடங்கள் உள்பட தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் இருக்கும் 10,260 காலிப்பணியிடங்களை நிரப்ப கழகத்தின் மேலாண் இயக்குநர் அரசிடம் அனுமதி கோரியுள்ளார்.
இதை ஐகோர்ட்டின் உத்தரவுப்படி கவனமாக பரிசீலித்த அரசு, 10,260 காலிப்பணியிடங்களில் முதல்கட்டமாக மின்னியல் பிரிவில் 200 தொழில்நுட்ப உதவியாளர் பணிகளில் ஆட்களை நியமிக்க 2 நிபந்தனைகளுடன் ஒப்புதல் அளித்து இருக்கிறது. அதன் அடிப்படையில், காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகளை மேற்கொள்ள டி.என்.பி.எஸ்.சியை டேன்ஜெட்கோ அணுக வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications