திண்டுக்கல் மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணியிடங்கள்.. 5ம் வகுப்பு தகுதி.. எப்படி விண்ணப்பிப்பது?
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டத்தில் காலியாக உள்ள 5 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டத்தில் கொல்லப்பட்டி, குட்டம், வேல்வார்கோட்டை, தென்னம்பட்டி, இராமநாதபுரம் ஆகிய 5 வருவாய் கிராமங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியுள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. காலிப்பணியிடம் உள்ள கிராமம் மற்றும் இட ஒதுக்கீடு விபரங்கள் வருமாறு:
கொல்லப்பட்டி கிராமத்திற்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த (பி.சி.யில்,முஸ்லீம் அல்லாதவர்) (பெண்கள்) விண்ணப்பிக்கலாம். குட்டம் கிராமத்திற்கு பொதுப்பிரிவினைச் சேர்ந்த முன்னாள் இராணுவத்தினர்(சி மற்றும் டி பிரிவு) (ஆண்/பெண்) இருபாலரும் விண்ணப்பிக்கலாம். வேல்வார்கோட்டை கிராமத்திற்கு எஸ்.ஸி பிரிவில் (ஆண்/பெண்) இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இப்பிரிவில் அருந்ததியினருக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. தென்னம்பட்டி கிராமத்திற்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பிரிவில் (ஆண் /பெண்) இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இராமநாதபுரம் கிராமத்திற்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பினை சேர்ந்த (பி.சி.யில்-முஸ்லீம் அல்லாதவர்) (ஆண்/பெண்) இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது 01.07.2020 அன்று குறைந்தபட்சம் 21 ஆண்டுகள், அதிகபட்சமாக பொதுப்பிரிவினருக்கு 30 ஆண்டுகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர்மரபினருக்கு 32 ஆண்டுகள், தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 35 ஆண்டுகள். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள பதிவுகள் நாளது தேதி வரை புதுப்பிக்கபட்டிருக்க வேண்டும்.விண்ணப்பதாரர்கள் வேடசந்தூர் வட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட தகுதிகளுடைய நபர்கள் கல்வித்தகுதி, இருப்பிடச் சான்று, வயது, சாதி குறித்த ஆவணங்களில் சான்றொப்பமிட்ட நகல்களுடன் வேடசந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு 15.12.2020-ம் தேதி 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என வேடசந்தூர் வட்டாட்சியர் பா.ஆ.லதா தெரிவித்துள்ளார்.