"வேலையில்லா திண்டாட்டம்".. 7,500 கான்ஸ்டபிள் பணிக்கு.. பிஎச்டி முடித்தோர் உள்பட 9.75 லட்சம் பேர் விண்ணப்பம்
இந்தூர்: பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில் கான்ஸ்டபிள் பணியிடத்துக்கு 10ம் வகுப்பு தான் தகுதி என்ற நிலையில் பிஎச்டி, இன்ஜினியரிங், டிகிரி, பட்ட மேற்படிப்பு, டிப்ளமோ முடித்தவர்கள் உள்பட மொத்தம் 9.75 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இது அங்கு நிலவும் வேலையில்லா திண்டாட்டத்தை காட்டும் வகையில் உள்ளது.
மத்திய பிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக பாஜகவின் மோகன் யாதவ் செயல்பட்டு வருகிறார். இந்த மாநிலத்தில் கடந்த 2003ம் ஆண்டு முதல் தொடர்ந்து பாஜக தலைவர்கள் தான் முதல்வராக பொறுப்பு வகித்து வந்தனர். இடையில் 2018 டிசம்பர் முதல் 2020 மார்ச் மாதம் வரை காங்கிரஸ் கட்சியின் கமல்நாத் முதல்வராக இருந்தார். மீதமுள்ள காலம் முழுவதும் பாஜக தான் ஆட்சி செய்தது. இப்போதும் பாஜக ஆட்சி தான் இருக்கிறது.

இந்நிலையில் தான் மத்திய பிரதேசத்தில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து உள்ளதை காட்டும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியிடப்பட்டது. அதன்படி மாநிலம் முழுவதும் 7500 கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டது.
இதற்கான விண்ணப்ப தேதி கடந்த மாதம் 15ம் தேதி தொடங்கியது. செப்டம்பர் 29 ம் தேதி விண்ணப்ப தேதி முடிவுக்கு வர இருந்தது. ஆனால் அதிகமானவர்கள் விண்ணப்பித்ததால் விண்ணப்ப தேதி அக்டோபர் 6ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. அதன்படி தற்போது 7,500 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு மொத்தம் 9.76 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். அதன்படி பார்த்தால் ஒரு கான்ஸ்டபிள் பணிக்கு 130 பேர் போட்டியிடுகின்றனர்.
மேலும் இந்த கான்ஸ்டபிள் பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கல்வித்தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி என்பது தான். ஆனால் பிஎச்டி படிப்பை முடித்தவர்கள், இன்ஜினியரிங் படிப்பை முடித்தவர்கள், டிகிரி முடித்தவர்கள், பட்ட மேற்படிப்பு மற்றும் டிப்ளமோ படிப்பை முடித்தவர்கள் போட்டி போட்டு விண்ணப்பம் செய்துள்ளனர்.
குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் கான்ஸ்டபிள் பணிக்கு விண்ணப்பம் செய்துள்ள 9.76 லட்சம் பேரில் 42 பேர் பிஎச்டி படிப்பை முடித்துள்ளனர். அதேபோல் 12 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் இன்ஜினியரிங் படிப்பை முடித்துள்ளனர். மேலும் டிகிரி, பட்ட மேற்படிப்பு படித்தவர்களும் விண்ணப்பம் செய்துள்ளனர். இது கல்விக்கேற்ற வேலைவாய்ப்பு இல்லாததை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளதோடு, மாநிலத்தில் நிலவும் வேலையில்லாத திண்டாட்டத்தை காட்டும் வகையில் அமைந்துள்ளது.
வேலையில்லாமல் இருப்பதை விட கான்ஸ்டபிள் பணியில் சேர்ந்து அரசு சம்பளத்தை பெறலாம் என்ற எண்ணத்தில் உயர்கல்வி படித்தவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். இதற்கான எழுத்து தேர்வு அக்டோபர் 30ம் தேதி நடைபெற உள்ளது. அதன்பிறகு உடற்தகுதி தேர்வு நடக்கும். பிறகு அடுத்த ஆண்டு மே அல்லது ஜூன் மாதத்தில் அனைவரும் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு குறைந்தபட்சமாக மாதம் ரூ.19500 சம்பளம் கிடைக்கும். அதிகபட்சமாக ரூ.62,000 வரை சம்பளம் கிடைக்கும். இந்த பணிக்கான தேர்வு ஆன்லைனில் நடைபெற உள்ளது. இதற்காக மாநிலத்தில் போபால், இந்தூர், ஜபால்பூர், காந்த்வாடா, நிமூச், ரேவா, ரட்லம், சாகர், சாதனா, சிதி, உஜ்ஜைன் உள்ளிட்ட இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.












Click it and Unblock the Notifications