சம்பளம் தர காசு இல்லையாம்.. 18,000 ஊழியர்களை ஒரேயடியாக வேலையை விட்டு தூக்கும் இன்டெல்!
நியூயார்க்: தொழில்நுட்ப உலகின் முன்னணி நிறுவனமான இன்டெல் தடாலடியாக 18,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்திருக்கிறது. இது அந்நிறுவனத்தின் மொத்த தொழிலாளர்களில் 15 சதவிகிதமாகும். செலவை குறைக்கவே பணிநீக்கம் செய்வதாக இந்நிறுவனம் அறிவித்திருக்கிறது.
உழைப்பு சுரண்டலுக்கு கார்ப்பரேட் உலகில் வெவ்வேறு பெயர்கள் இருக்கின்றன. பணிக்கு தகுதியானவர்கள் என்று சொல்லிதான் ஒவ்வொரு நிறுவனத்திலும் ஆட்கள் எடுக்கப்படுகின்றனர். அவர்களின் திறமையை மேம்படுத்த வேண்டியது அந்நிறுவனத்தின் பொறுப்புதான். மாணவர்கள் படிக்கவில்லை என்றால் அதற்கு ஆசிரியர் எப்படி காரணமோ, அதேபோலதான் நிறுவனங்களும். ஆனால், கார்ப்பரேட் உலகில் இந்த நியாயங்களுக்கு இடம் கிடையாது.

பணி நீக்கம்: அவர்களுக்கு தெரிந்தது லாபம் மட்டுமே. எனவே, ஊழியர்களின் திறன் மேம்படவில்லை, வேலைகளில் திருப்தி இல்லை, உப்பு இல்லை, மிளகு இல்லை என்று கூறி அவர்களை வேலையை விட்டு துரத்திவிடுகிறார்கள். இப்படி வேலை நீக்கம் செய்யும் நிறுவனங்களில் பட்டியலில் தற்போது இன்டெல் இணைந்திருக்கிறது. தொழில்நுட்ப உலகில் இன்டெலுக்கு என தனி இடம் உண்டு. அந்த அளவுக்கு பிரபல நிறுவனம், தனது ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க காசு இல்லை என்று 18,000 பேரை வெளியேற்ற உள்ளதாக அறிவித்திருக்கிறது.
காரணம் என்ன?: கடந்த ஏப்ரல்-ஜூன் காலத்தில் தங்கள் நிறுவனம் $1.6 பில்லியன் இழப்பை சந்தித்திருக்கிறது என்று இன்டெல் அறிவித்திருந்தது. ஆனால் முந்தைய ஆண்டில் இதே காலத்தில் $1.5 பில்லியன் அளவுக்கு லாபம் பார்த்திருந்தது. மறுபுறம் மொத்த வருவாயும் $12.9 பில்லியனில் இருந்து $12.8 பில்லியனாகக் குறைந்தது. இதுதான் இந்த பணி நீக்க நடவடிக்கைக்கு முக்கிய காரணமாகும்.
இலக்கு: மேற்குறிப்பிட்ட இழப்பு காரணமாக வரும் 2025ம் ஆண்டுக்குள் இன்டெல் நிறுவனம் $10 பில்லியன் அளவுக்கு செலவை குறைக்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறது. அதேநேரம் NVIDIA மற்றும் AMD போன்ற போட்டி நிறுவனங்களை சமாளிக்க இன்டெல் தன்னுடைய வணிக உத்தியை மறுசீரமைக்கவும் முயன்று வருகிறது. மேலும் AI மற்றும் சிப் ஃபேப்ரிகேஷன் சந்தைகளில் நீண்ட கால வளர்ச்சியில் கவனம் செலுத்த இன்டெல் திட்டமிட்டிருக்கிறது.
இதுதவிர, வரும் செப்டம்பரில் Lunar Lake மொபைல் சிப்களை இன்டெல் வெளியிட இருக்கிறது. இதனை தைவான் செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனம் தயாரிக்கிறது. எனவே இந்நிறுவனத்திற்கு ஊழியர்களை அதிகரிக்க இன்டெல் திட்டமிட்டிருக்கிறது. Lunar Lake என்பது இன்டெல்லின் அடுத்த தலைமுறை மொபைல் CPU ஆகும். தற்போது படுத்திருக்கும் இன்டெல் லாபத்தை செங்குத்தாக உயர்த்த இந்த Lunar Lake கைகொடுக்கும் என்று இன்டெல் நம்பியிருக்கிறது.
ஆக இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் தற்போது இன்டெல் பணி நீக்கத்தை அறிவித்திருக்கிறது. புதிய முதலீடுகள், லாபத்தை அதிகரிப்பது, செலவுகளை குறைப்பது போன்றவற்றிற்காக 18,000 பணியாளர்கள் வெளியேற்றப்பட இருக்கிறார்கள். இப்படி கொத்துக்கொத்தாக ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் முதல் நிறுவனம் இன்டெல் கிடையாது. அதேபோல பணி நீக்கங்கள் இந்த நிறுவனத்துடன் நிற்கப்போவதும் கிடையாது. எனவே இதற்கு எதிராக அரசு தலையிட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications