ஆச்சரியம்.. மொத்தம் 27,000 பணியிடங்கள்.. ஆனா ஒருவர் கூட விண்ணப்பிக்கவில்லை! சொல்வது தமிழ்நாடு அரசு
சென்னை: தமிழ்நாடு முழுக்க சுமார் 27,000 பணியிடங்களுக்கு யாருமே விண்ணப்பிக்கவில்லை என்று அரசு இப்போது சொல்லியுள்ளது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இந்த காலத்தில் வேலை கிடைப்பதே எந்தளவுக்குக் கடினமான ஒன்றாக மாறிப் போய் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். பட்டம் படித்தோருக்கும் கூட வேலை கிடைப்பது பெரும் சிரமமாகவே இருக்கிறது.

அதிலும் கொரோனாவுக்கு பிறகு நிலைமை ரொம்பவே மோசம்.. எல்லா நாடுகளிலும் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ள நிலையில், புதிதாக எந்தவொரு பணிக்கும் ஆட்களை வேலைக்கு எடுப்பது என்பது குறைந்துள்ளது.
தமிழ்நாடு அரசு: இதன் காரணமாகவே 10ஆம் வகுப்பைத் தகுதியாகக் கொண்ட க்ரூப் 4 தேர்வுகளுக்கே கூட பட்டப்படிப்பு படித்தவர்கள் கூட விண்ணப்பிக்கிறார்கள். மேலும், சில நூறு காலியிடங்கள் மட்டுமே இருக்கும் வேலைகளுக்குக் கூட பல லட்சம் பேர் விண்ணப்பிக்கும் நிகழ்வுகளும் கூட நடக்கிறது. இதற்கிடையே சுமார் 27,000 பணியிடங்களுக்கு யாருமே விண்ணப்பிக்கவில்லை என்று அரசு இப்போது சொல்லியுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் இருக்கும் கோயில்களை நிர்வகிக்க அறங்காவலர்கள் குழு அமைக்க முடிவு செய்யப்பட்ட நிலையில், இருப்பினும் அதை நியமிப்பதில் தொடர்ந்து தாமதம் செய்யப்படுவதாக ஹிந்து தர்ம பரிஷத் என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யத் தமிழக அரசுக்குக் கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டது.
பதில் மனு: அதன்படி கடந்த மே மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், அப்போது தமிழக அரசு அறிக்கையைத் தாக்கல் செய்திருந்தது. அதில் மே மாத இறுதிக்குள் அனைத்து கோயில்களிலும் நிச்சயம் அறங்காவல் குழு அமைக்கப்படும் எனக் கூறப்பட்டிருந்தது.. இருப்பினும், அறங்காவலர் குழு அமைப்பதில் தாமதம் தொடர்ந்த நிலையில், தமிழ்நாடு அரசு மீண்டும் திருத்தப்பட்ட அறிக்கையைத் தாக்கல் செய்திருந்தது.
ஏன் முக்கியம்: அந்த திருத்தப்பட்ட அறிக்கையில், "தமிழ்நாடு முழுக்க இருக்கும் 6,420 கோவில்களில் ஏற்கனவே அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் மொத்தம் இருக்கும் 3,471 கோயில்களில் ஏற்கனவே பரம்பரை அறங்காவலர்களும், 2,949 கோயில்களில் பரம்பரை இல்லாத அறங்காவலர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்..
அதேநேரம் 27,362 கோயில்களில் அறங்காவலர் பதவிக்கு யாருமே விண்ணப்பிக்கவில்லை.. இது குறித்த அறிவிப்பாணையை விரைவில் வெளியிட உள்ளோம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications