தாய்லாந்தில் ஐடி வேலை.. அதிக சம்பளம், ஃபிரி பிளைட் டிக்கெட்.. அரசையே ஆடிப்போக வைத்த கும்பல்
சென்னை: தமிழ்நாட்டில் மத்திய அரசில் பதிவு பெறாமல் வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் ஏஜெண்டுகள், நிறுவனங்கள் மீது காவல்துறை மூலம் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.
அதிக சம்பளம், தங்குமிட வசதி, நாடு திரும்புவதற்கான விமானப் பயணச் சீட்டு மற்றும் விசா ஏற்பாடு செய்யப்படும் என்று ஆசை வார்த்தைகளை சொல்லி ஐடி வேலை என்ற பெயரில் தமிழக இளைஞர்கள் ஏராளமானோர் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

தகவல் தொழில்நுட்ப பணி என ஏமாற்றி அழைத்து செல்லப்பட்ட இளைஞர்கள் சட்டவிரோதமாக தாய்லாந்து எல்லை வழியாக லாவோஸ் நாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். அங்கு அவர்களை மிரட்டி தவறான வேலையை செய்ய வைத்துள்ளனர்.. இதில் இருந்து தப்பிக்க வழி தெரியாமல் இந்திய தூதரகத்தை ஏராளமானோர் தொடர்பு கொண்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு ஏஜெண்டுகளை எச்சரித்துள்ளது.
அயலக தமிழர் நலத்துறை ஆணையர் பா.கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: " அண்மைக்காலமாக தகவல் தொழில்நுட்ப பணி என்ற பெயரில், கம்போடியா, தாய்லாந்து, மியான்மர் (பர்மா) ஆகிய நாடுகளுக்கு சுற்றுலா விசாவில் அழைத்துச் செல்லப்பட்டு சட்டவிரோதமான இணையதள நடவடிக்கைகளில் ஈடுபடும்படி கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.
இந்த பணிகளை செய்ய மறுக்கும் நபர்களை கடுமையாக துன்புறுத்துகிறார்கள். இதுவரை மேற்குறிப்பிட்ட நாடுகளில் இருந்து கடந்த வருடம் மட்டும் 83 தமிழர்களை அயலகத் தமிழர் நலத்துறை மீட்டுள்ளது.
சமீபகாலமாக தாய்லாந்து வழியாக லாவோஸ் நாட்டிற்கு தகவல் தொழில்நுட்ப பணி, டிஜிட்டல் சேவைகளை சந்தைப்படுத்துகின்ற மேலாண்மை பணி எனக்கூறி தமிழக இளைஞர்களை ஏஜெண்டுகள் அழைத்துச் சென்று சட்டவிரோத செயல்களில் ஈடுபட கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.
அதிக சம்பளம், தங்குமிட வசதி, நாடு திரும்புவதற்கான விமானப் பயணச் சீட்டு மற்றும் விசா ஏற்பாடு செய்யப்படும் என்று ஆசை வார்த்தைகளை சொல்லி இளைஞர்களை தேர்வு செய்கின்றனர். தகவல் தொழில்நுட்ப பணி என நம்பி சென்ற இளைஞர்கள் சட்டவிரோதமாக தாய்லாந்து எல்லை வழியாக லாவோஸ் நாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, லாவோஸில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் பணிபுரிய நிர்ப்பந்தப்படுகின்றனர்.
இதுபோன்ற மோசடி வலையில் தமிழக இளைஞர்கள் மாட்டிக்கொள்ளாமல் எச்சரிக்கை உணர்வுடன், ஆட்சேர்ப்பு முகவர் மற்றும் வேலை செய்யவிருக்கும் நிறுவனத்தை பற்றி நன்றாக விசாரித்து பணிக்கு செல்ல அறிவுறுத்தப்படுகிறது.
மேலும், வேலைக்கான விசாவின் உண்மைத்தன்மை மற்றும் முறையான பணி ஒப்பந்தம் குறித்து பயணிப்பதற்கு முன் பணிபுரிய செல்ல உள்ள நாட்டிலுள்ள இந்திய தூதரகம் அல்லது இந்தியாவிலுள்ள அந்நாட்டின் தூதரகம் மூலம் கட்டாயம் அறிந்து கொள்ளவேண்டும்.
லாவோஸ் மற்றும் கம்போடியாவில் வேலை வாய்ப்புகள் குறித்த விவரங்களை லாவோஸ் நாட்டிலுள்ள இந்திய தூதரகத்தின் தொலைபேசி எண் 856-2055536568 மூலமும், [email protected] என்ற மின்னஞ்சல் மூலமும், கம்போடியாவில் உள்ள இந்திய தூதரகத்தின், மின்னஞ்சல் [email protected]. [email protected] மூலமும் சரிபார்க்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அயலக வேலைவாய்ப்பு தொடர்பான விவரங்கள் மற்றும் அயல்நாடுகளில் உள்ள தமிழர்கள் சந்திக்கும் இன்னல்கள் குறித்து தீர்வு காண தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறையின் கட்டணமில்லா தொலைபேசி எண்களான 18003093793 (இந்தியாவிற்குள்), 8069009901 (அயல்நாட்டில் இருந்து) தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
8069009900 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்கலாம். மேலும், 90421 49222 என்ற சென்னை குடிப்பெயர்வு பாதுகாப்பு அலுவலர் உதவி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். தமிழ்நாட்டில் மத்திய அரசில் பதிவு பெறாமல் வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் ஏஜெண்டுகள், நிறுவனங்கள் மீது காவல்துறை மூலம் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications