'நான் முதல்வன்' திட்டத்தில் தமிழக அரசு அற்புதமான வாய்ப்பு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
சென்னை: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், ரயில்வே, வங்கி பணி தேர்வுகளுக்கு 6 மாத இலவச உறைவிட பயிற்சியினை தமிழக அரசு அளிக்க உள்ளது. 'நான் முதல்வன்' போட்டித் தேர்வுகள் பிரிவின் மூலம் இந்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் பயில ஆர்வம் உள்ள மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது.
மத்திய பணியாளர் தேர்வாணையம், ரயில்வே, வங்கிப் பணி ஆகிய தேர்வுகளில் தமிழக இளைஞர்கள் அதிகம் வெற்றி பெற வேண்டும் என்று தமிழக அரசு விரும்புகிறது. ஐஏஏஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் அதிகாரிகளாகவும், வருமான வரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை, மத்திய அமைச்சகங்கள், தபால்துறை, வங்கி துறை உள்பட பல்வேறு மத்திய அரசு பணிகளில் தமிழர்கள் அதிகம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக உண்டு உறைவிட வசதியுடன் சிறப்பு பயிற்சி அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. சுமார் ஆயிரம் பேர் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: "'நான் முதல்வன்' திட்டத்தில் போட்டித் தேர்வுகளுக்கான தனி பிரிவை இளைஞர் நலத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த மார்ச் 7-ம் தேதி தொடங்கி வைத்தார். மத்திய அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை தமிழக இளைஞர்கள் எளிதாக அணுகும் வகையில் பல பயிற்சி திட்டங்களை இந்த பிரிவு செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில், 'மத்திய பணியாளர் தேர்வாணையம், ரயில்வே, வங்கிப் பணி ஆகிய தேர்வுகளில் தமிழக இளைஞர்கள் அதிகம் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில், தேர்ந்தெடுக்கப்பட்ட 1,000 மாணவர்களுக்கு உண்டு, உறைவிட வசதியுடன் 6 மாத பயிற்சி வழங்கப்படும்' என்று 2024-25-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின்கீழ் இயங்கிவரும் 'நான் முதல்வன்' போட்டித் தேர்வுகள் பிரிவின் மூலம் கட்டணமில்லா உறைவிட பயிற்சி தொடங்கப்பட உள்ளது.
இதில் பயன்பெற விரும்பும் மாணவர்கள் வங்கிப் பணி தேர்வுஅல்லது மத்திய பணியாளர் தேர்வாணையம் மற்றும் ரயில்வே தேர்வு, இவற்றில் ஏதேனும் ஒன்றுக்கு மட்டுமே பயிற்சி பெற முடியும். இதற்கு 1,000 பயனாளர்களை தேர்ந்தெடுக்க ஜூலை 14-ம் தேதி இரு வேறு நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
ஆர்வம் உள்ள மாணவர்கள், இணையதளத்தில் (https://www.naanmudhalvan.tn.gov.in) உள்ள அறிவிக்கையை படித்துப் பார்த்து,ஜூன் 8 (இன்று) முதல் விண்ணப் பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் ஜூன் 23-ம் தேதி. தேர்வுக்கானநுழைவுச்சீட்டு ஜூலை 9-ல் வெளியிடப்படும். தேர்வு ஜூலை 14-ம் தேதி காலை 10 முதல் 11 மணி வரைநடைபெறும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications