ஏஐ வளர்ச்சியால் பிபிஓ, கால் சென்டர்கள் காலி? அடுத்த 10 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு பெரிய அளவில் சரியும்
டெல்லி: செயற்கை நுண்ணறிவின் (AI) விரைவான வளர்ச்சியால் அடுத்த 10 ஆண்டுகளில் பிபிஓ, கால் சென்டர் துறைகளில் வேலைவாய்ப்பு கணிசமாகக் குறையும்" என்று -2023-24 பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பண்ணை சாரா துறையில் ஆண்டுக்கு கிட்டத்தட்ட 78.5 லட்சம் வேலைகளை உருவாக்கினால் மட்டுமே இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என்றும் கூறப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. வேலைவாய்ப்பு, உள்நாட்டு உற்பத்தி. சேவை துறைகளின் வளர்ச்சி, இந்தியாவின் எட்டு பெரிய நகரங்களின் ரியல் எஸ்டேட் வளர்ச்சி, பணவீக்கம். விவசாயம், கிராமப்புற பெண்களின் வேலைவாய்ப்பு, கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சி, தொழில்துறை வளர்ச்சி, பல்வேறு மாநிலங்களின் பணவீக்கம் உள்பட பல்வேறு விஷயங்கள் இடம் பெற்றுள்ளன.

அவற்றில் சிலவற்றை இப்போது பார்ப்போம். மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை 2023-ம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.4 சதவீதத்திலிருந்து 2024-ம் நிதியாண்டில் 5.6 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. 2024-ஆம் நிதியாண்டுக்கான மூலதன செலவு 9.5 லட்சம் கோடி ரூபாயாக உள்ளதாகவும், இது ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 28.2 சதவீதம் அதிகரிப்பு என்று கூறப்பட்டுள்ளது.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை பொறுத்தவரை 2024-25-ம் ஆண்டில் 6.5 சதவீதத்துக்கும், 7 சதவீதத்துக்கும் இடையில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2023-24-ம் நிதியாண்டில் 8.2% அளவுக்கு வளர்ச்சி அடைந்திருப்பதுடன், நான்கு காலாண்டுகளில் மூன்றில் 8 சதவீதத்தைத் தாண்டியு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தொழில்துறை வளர்ச்சி விகிதம் 9.5 சதவீதமாக அதிகரித்ததே இந்த வளர்ச்சிக்குக் காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
2024-ம் நிதியாண்டில், சில்லறை பணவீக்கமும், 5.4 சதவீதமாகக் குறைந்துள்ளது என்றும் 2024-25-ம் நிதியாண்டில் இது 4.5 சதவீதமாகக் குறையக் கூடும் என ரிசர்வ் வங்கி கணித்திருக்கிறது. 29 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பணவீக்கம் 6 சதவீதத்திற்கும் கீழ் வந்துள்ளது என்று கணிப்பில் கூறப்பட்டுள்ளது. கடன் நிர்வாகம் மற்றும் அரசின் நிதிக் கொள்கைகள் காரணமாகவே இந்த மாற்றம் நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நிதிப் பற்றாக்குறை பட்ஜெட் இலக்கான ரூ.9.1 லட்சம் கோடியை விட 8.6 சதவீதம் குறைவாக இருந்ததால் மாநில அரசுகளின் செலவினங்களின் தரம் மேம்பட்டிருப்பதாகவும், 2024 மார்ச் மாதத்தில் மொத்த வாராக் கடன் விகிதம் 2.8 சதவீதமாகக் குறைந்துள்ளதாகவும், 12 ஆண்டுகளில் இது மிகக் குறைந்த அளவு என்றும் கூறப்பட்டுள்ளது. 2024-ம் நிதியாண்டில் விவசாயம், தொழில் மற்றும் சேவைத் துறைகளின் பங்குகள் முறையே 17.7 சதவீதம், 27.6 சதவீதம் மற்றும் 54.7 சதவீதமாக இருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024-ம் நிதியாண்டில், உற்பத்தித் துறை 9.9 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது என்றும் கட்டுமானப் பணிகளும் 9.9 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாகவும், தனியார் நிதி அல்லாத நிறுவனங்களின் மொத்த நிலையான மூலதன உருவாக்கம் 2023-ல் 19.8 சதவீதம் அதிகரித்ததாகவும் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் எட்டு பெரிய நகரங்களில் 4.1 லட்சம் குடியிருப்புகள் விற்கப்பட்டுள்ளதால், 2023-ம் ஆண்டில் ரியல் எஸ்டேட் 33 சதவீத ஆண்டு வளர்ச்சியைக் கண்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் சேவைகள் ஏற்றுமதி 2024-ம் நிதியாண்டில் 341.1 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளதாகவும். 2024 மார்ச் மாத நிலவரப்படி அந்நிய செலாவணி கையிருப்பு 11 மாத திட்டமிடப்பட்ட இறக்குமதிகளை ஈடுகட்டப் போதுமானதாக இருந்தது என்றும் பொருளதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவின் அசுர வளர்ச்சியால், அடுத்த 10 ஆண்டுகளில் பிபிஓ துறையில் வேலைவாய்ப்பு கணிசமாகக் குறையும் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும் அடுத்த 10 ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியால் உற்பத்தித் திறன் பெரிய அளவில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு இயக்கத்துக்காக 2024-ஆம் ஆண்டில் ரூ.10,300 கோடி அரசு ஒதுக்கி உள்ளது .
அதேநேரம் இந்திய பொருளாதாரம் வளர்ச்சியடைய 2030-ம் ஆண்டு வரை பண்ணை சாரா துறையில் ஆண்டுக்கு கிட்டத்தட்ட 78.5 லட்சம் வேலைகளை உருவாக்க வேண்டியது அவசியம் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது . 5 ஆண்டுகளில் 60 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான , உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டம், மித்ரா ஜவுளித் திட்டம் (20 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்), முத்ரா திட்டம் போன்ற தற்போதுள்ள திட்டங்களின் மூலம் வேலைவாய்ப்பு உயரும் என பொருளாதார ஆய்வறிக்கையில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் 2017-18-ம் ஆண்டில் 23.3 சதவீதமாக இருந்த பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம், 2022-23 ஆம் ஆண்டில் 37 சதவீதமாக உயர்ந்துள்ளது என்றும் இதற்கு கிராமப்புற பெண்களின் பங்கேற்பு அதிகரித்து வருவதே முக்கிய காரணமாம் என்றும ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே இந்தியாவின் பெரு கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபம் 2024 மற்றும் 2023 நிதியாண்டுக்கு இடையில் நான்கு மடங்காக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications