மாதம் 20 ஆயிரம் வரை ஊக்கத்தொகை..தமிழக அரசு தரும் வேலைவாய்ப்பு பயிற்சி.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்
ஊட்டி: தினமும் 800 ரூபாய் ஊக்கத்தொகையுடன் தமிழக அரசு ஊட்டியில் வேலைவாய்ப்பு பயிற்சி முகாமை நடத்துகிறது. தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள 18 வயது முதல் 40 வயது வரை உள்ள தொழிலாளர்கள் இந்த பயிற்சியில் பங்கேற்கலாம். கட்டுமான கழகம் மூலம் 3 மாத திறன் பயிற்சி மற்றும் ஒரு வாரகால திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த பயிற்சி நாளை தொடங்குகிறது.
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு அரசு பல்வேறு சலுகைகள் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சிகளை அளித்து வருகிறது. திருமணம், மகப்பேறு, குழந்தைகளுக்கு கல்வி நிதி உதவி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இது தவிர ஒவ்வொரு மாவட்டங்களிலும் சில மாதங்கள் வேலைவாய்ப்பு பயிற்சியும் அளிக்கிறது. இதில் பங்கேற்க விரும்புவோருக்கு பயிற்சி கட்டணம், உணவு, தங்குமிடம் இலவசம் ஆகும்.

இதுகுறித்து நீலகிரி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) லெனின் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியம் உருவாக்கப்பட்டு, அதனுடன் 19 வகை தொழிலாளர் நல வாரியங்கள் செயல்படுகின்றன. இதில் உறுப்பினராக 18 வயது முதல் 60 வயது வரை உள்ள தொழிலாளர்கள் பதிவு செய்து நலத்திட்டங்களை பெறுகின்றனர். இவர்கள் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும்.
உறுப்பினர்களுக்கு திருமணம், மகப்பேறு, குழந்தைகளுக்கு கல்வி நிதி உதவி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேலும் கொத்தனார், வெல்டர், மின்சார வேலை, பிளம்பர், மரவேலை, கம்பி வளைப்பவர்கள் உள்பட பல தொழில் புரியும் தொழிலாளர்களுக்கு கட்டுமான கழகம் மூலம் 3 மாத திறன் பயிற்சி மற்றும் ஒரு வாரகால திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இந்த பயிற்சி நாளை (புதன்கிழமை) ஊட்டியில் தொடங்குகிறது. பயிற்சி பெற உள்ளவர்கள் 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அல்லது ஐ.டி.ஐ. படித்திருக்க வேண்டும். 18 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். பயிற்சி கட்டணம், உணவு, தங்குமிடம் இலவசம். பயிற்சி பெறுவோருக்கு எல் அண்டு டி, கட்டுமான திறன் பயிற்சி நிலையத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
பயிற்சி பெறுவோருக்கு தினமும் வேலை இழப்பு ஏற்படுவதை ஈடுசெய்ய தலா ரூ.800 வழங்கப்படும். இந்த தொகையில் உணவுக்கு மட்டும் பிடித்தம் செய்யப்படும். எனவே, தகுதியானவர்கள் தங்களுடைய நல வாரிய அட்டை, கல்வி சான்றிதழ், ஆதார் அட்டை, ரேசன் கார்டு ஆகியவற்றின் நகல்களுடன் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் படிவம் பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்" இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications