கூட்டுறவு வங்கிகளில் 2,000 பணியிடங்கள்! வெறும் டிகிரி மட்டும் போதாது.. கல்வி தகுதி இதுதான்! முழு விவரம்
சென்னை: தமிழ்நாடு கூட்டுறவு வங்கிகள், சங்கங்களில் 2,000 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்த பணியிடங்களுக்கு டிகிரி மட்டும் முடித்திருந்தால் போதாது. அப்படி என்ன கல்வித் தகுதி கேட்கப்பட்டுள்ளது என்பதனை இங்கு பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகள், சங்கங்களில் காலியாக உள்ள 2 ஆயிரம் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மாவட்ட வாரியாக காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பணியிடங்களுக்கான கல்வி தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

கல்வித் தகுதி;
ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (10 + 2 + 3 முறையில்) மற்றும் கூட்டுறவுப் பயிற்சி படித்து இருக்க வேண்டும்.
பல்கலைக் கழகங்களால் வழங்கப்படும் பட்டப்படிப்பிற்குப் பதிலாக, பதினைந்து ஆண்டுகள் இராணுவத்தில் பணிபுரிந்தவர்களுக்கு இராணுவத்தால் வழங்கப்படும் பட்டப்படிப்புச் சான்றிதழ் (Military Graduation) பெற்றுள்ள முன்னாள் இராணுவத்தினர்களும் விண்ணப்பிக்கலாம். ஆனால் அவர்கள் பள்ளி இறுதித் தேர்வும் (SSLC) மேல்நிலைக் கல்வியும் (HSC) முறையாக பள்ளியில் பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கீழ்க்காண்பவை கூட்டுறவுப் பயிற்சியாகக் கருதப்படும்.
கூட்டுறவு பயிற்சி:
1. தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் நடத்தப்படும் கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் வழங்கப்படும் கூட்டுறவுப் பயிற்சி (Diploma in Cooperative Management).
2. சென்னை நடேசன் கூட்டுறவு மேலாண்மை நிலையம் மற்றும் மதுரை கூட்டுறவு மேலாண்மை நிலையம் மூலம் நடத்தப்படும் உயர் கூட்டுறவுப் (Higher Diploma in Cooperative Management).
பின்வரும் பட்டப்படிப்பு படித்தவர்கள் கூட்டுறவுப் பயிற்சி பெறுவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறார்கள்.
வைகுந்த் மேத்தா தேசிய கூட்டுறவு நிறுவனம், புனே வழங்கும் முதுநிலை வாணிப மேலாண்மை (கூட்டுறவு) பட்டம்.
பி.காம் (ஆனர்ஸ்) கூட்டுறவு
எம்.காம் (கூட்டுறவு)
எம்.ஏ (கூட்டுறவு)
பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக் கழகத்தால் வழங்கப்படும், கூட்டுறவில் முதுநிலை பட்டப்படிப்பு.
பி.ஏ (கூட்டுறவு)
பி.காம் (கூட்டுறவு)
பி.ஏ(கூட்டுறவு), பி.காம் (கூட்டுறவு) படித்து கூட்டுறவுப் பயிற்சியிலிருந்து விலக்குக் கோருபவர்கள், கணக்குப்பதிவியல் (Book Keeping), வங்கியியல் (Banking), கூட்டுறவு (Cooperation), தணிக்கை (Auditing) ஆகிய பாடங்களைப் படித்துத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இல்லையெனில் இவர்கள் கூட்டுறவுப் பயிற்சியினை முடித்திருக்க வேண்டும்.
பிற விவரங்கள்:
2024 -25 ஆம் ஆண்டில் 24 வது அஞ்சல் வழி கூட்டுறவு பயிற்சி மற்றும் 2025-26 ஆம் ஆண்டில் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் நடத்தப்படும் கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் நடத்துப்படும் முழு நேர கூட்டுறவுப் பயிற்சி பயின்று வரும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் இவர்கள் கூட்டுறவுப் பயிற்சியினைப்பெற்று வருவதற்கான சான்றிதழினை (Bonafide Certificate) சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனத்திடமிருந்து பெற்றுச் சமர்ப்பிக்க வேண்டும். கூட்டுறவுப் பயிற்சியினை வெற்றிகரமாகப் படித்து முடித்ததற்கான சான்றிதழைச் சமர்ப்பித்த பின்னரே இவர்களுக்குப் பணிநியமன ஆணை வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் பள்ளி இறுதி வகுப்பு அல்லது மேல்நிலைப் படிப்பு அல்லது பட்டப்படிப்பின் போது தமிழ் மொழியை ஒரு பாடமாக படித்துத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி பயன்பாட்டில் அடிப்படை அறிவு பெற்றிருத்தல் வேண்டும் (Knowledge in Computer Application). உள்ளிட்ட விவரங்கள் கோரப்பட்டுள்ளன.
தேர்வு முறையை பொறுத்தவரை எழுத்து தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க வரும் 29.08.2025 - கடைசி நாளாகும். தேர்வு 11.10.2025 என்று காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறும். நவம்பர் 12-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை நேர்காணல் நடத்தப்பட்டு இறுதி முடிவுகள் நவம்பர் 15-ந் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக உள்ள கூட்டுறவு சங்கங்களின் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
காஞ்சிபுரத்திற்கான இணையதள முகவரி: https://www.drbkpm.in/
தேர்வு அறிவிப்பினை படிக்க:
https://cooperativercs.s3.ap-south-1.amazonaws.com/Asst_2025/32_Notification_1.pdf












Click it and Unblock the Notifications