சொந்த ஊரிலேயே வேலை பார்க்கலாம்.. 1300 ஊராட்சி செயலாளர் பணியிடங்கள்.. வந்தது அறிவிப்பு
சென்னை: ஊராட்சி செயலாளர்கள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 1300 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாளை முதல் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும், தேர்வு முறை எப்படி நடைபெறும் என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கு பார்க்கலாம்.
தமிழகத்தில் மொத்தம் 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகள் இருக்கின்றன. இந்த ஊராட்சிகளின் முழு நிர்வாக பணிகளையும் செயலாளர்கள் கவனித்து வருகிறார்கள். ஊராட்சி தலைவர், உறுப்பினர்களுக்கு அடுத்த படியாக அவர்களுக்கு உறுதுணையாக இருந்து ஊராட்சியின் அன்றாட செயல்பாடுகளை கவனித்து வருகின்றனர்.

ஊராட்சி செயலாளர்கள் பணியிடம்
மத்திய, மாநில அரசு திட்டங்களை சரியாக செயல்படுத்துதல், குடிநீர், தெருவிளக்கு, சாலைகள் பராமரிப்பு போன்ற அடிப்படை வசதிகளை உறுதி செய்வது, சுகாதாரம் மற்றும் சுகாதாரம் தொடர்பான அரசு திட்டங்களை மேற்பார்வையிடுவது, வரி வசூல் செய்வது என அரசால் அறிவிக்கப்படும் அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றும் பொறுப்பு மிக்கவராக அரசுப் பணியாளராக ஊராட்சி செயலாளர்கள் செயல்படுகின்றனர்.
யார் யார் விண்ணப்பிக்க முடியும்
ஊராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இல்லாத நேரங்களில் சிறப்பு அலுவலர்கள் மேற்பார்வையில் ஊராட்சி செயலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் பல ஊராட்சிகளில் செயலாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலியிடங்களை அவ்வப்போது உரிய அறிவிப்பு வெளியிட்டு பணியிடங்கள் நிரப்பப்படும்.
அந்த வகையில் தான் தற்போது தமிழக முழுக்க காலியாக உள்ள 1300-க்கும் அதிகமான ஊராட்சி செயலாளர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யார் யார் விண்ணபிக்க முடியும்? எப்படி விண்ணப்பிப்பது என்பதனை இங்கு பார்க்கலாம்.
கல்வித் தகுதி
கல்வித் தகுதியை பொறுத்தவரை 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். மேலும் விண்ணப்பிக்க விரும்புவர்கள் அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருத்தல் வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது?
விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் www.tnrd.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக மட்டும் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து அந்தந்த மாவட்ட அளவில், காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை, தகுதிகள், வயது வரம்பு ஆகியவற்றுடன் கூடிய அறிவிப்பு வெளியிடப்படும்.
நாளை முதல் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். வரும் நவம்பர் 9ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும். அதற்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது.
தேர்வு முறை
வரும் நவம்பர் 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் சரிபார்க்கப்படும். பிறகு டிசம்பர் 3 ஆம் தேதிக்குள் தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் பட்டியலிடப்பட்டு, டிசம்பர் 4 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை ஒரு வாரத்திற்கு அந்தந்த மாவட்டங்களில் ஆட்சியர் தலைமையில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர், ஊராட்சிகள் உதவி இயக்குநர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ஆகியோர் கொண்ட குழுவினர் நேர்காணல் நடத்துவர்.
டிசம்பர் 16 ஆம் தேதி ரிசல்ட்
இதன் முடிவுகள் வரும் டிசம்பர் 16 ஆம் தேதிக்குள் வெளியிடப்படும். தொடர்ந்து 17 ஆம் தேதி பணி நியமன ஆணைகள் வழங்கப்படும். என்று கூறப்பட்டுள்ளது. அரசு வெளியிட்டுள்ள அட்டவணைப்படி, பணிகளை மேற்கொள்ள மாவட்ட கலெகட்டர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகளுக்கு இயக்க ஆணையர் பொன்னையா உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications