அரசு வேலை ரெடி.. இளைஞர்களுக்கு ஹேப்பி நியூஸ்! ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணி தேர்வு! TNPSC அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் அரசு வேலைக்கு தயாராகி வரும் இளைஞர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) புதிய அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. உதவி வேளாண் இயக்குநர் (விரிவாக்கம்), முதுநிலை அலுவலர் (நிதி) உள்ளிட்ட 14 விதமான தொழில்நுட்ப பணிகளுக்காக மொத்தம் 76 காலியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்காணல் பதவிகள்) குறித்த அறிவிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி செயல்பட்டு வருகிறது. ஏஓ முதல் ஆர்டிஓ வரை, குரூப் 1 முதல் குரூப் 8 வரையிலான பல்வேறு தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி நடத்தி, தகுதியான நபர்களை அரசுப் பணிகளுக்கு தேர்வு செய்து வருகிறது.
அந்த வகையில், தொழில்நுட்ப மற்றும் நிர்வாகத் துறைகளில் முக்கியமான பதவிகளை நிரப்ப இந்த ஒருங்கிணைந்த தேர்வு நடத்தப்பட உள்ளது.

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் எஸ்.கோபால சுந்தரராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், உதவி வேளாண் இயக்குநர் (விரிவாக்கம்), முதுநிலை அலுவலர் (நிதி) உள்ளிட்ட 14 பதவிகளில் 76 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in-ல்
வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த பணிகளுக்கான கணினி வழித் தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வில் பங்கேற்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள், வரும் ஜனவரி 20-ம் தேதி வரை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் போது தேர்வு கட்டணத்தை யுபிஐ உள்ளிட்ட ஆன்லைன் வசதிகள் மூலம் செலுத்தலாம் என்றும் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிக்கையின்படி, கணக்கு அலுவலர் (கிரேடு-3) பதவிக்கு 8 இடங்கள், உதவி வேளாண் இயக்குநர் (விரிவாக்கம்) பதவிக்கு 26 இடங்கள், உதவி மேலாளர் (கணக்கு) பதவிக்கு 9 இடங்கள், உதவி மேலாளர் (சட்டம்) பதவிக்கு 3 இடங்கள் மற்றும் முதுநிலை அலுவலர் (நிதி) பதவிக்கு 21 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதனுடன் சேர்த்து மற்ற தொழில்நுட்ப மற்றும் நிர்வாக பதவிகளும் இந்த ஒருங்கிணைந்த தேர்வின் கீழ் அடங்குகின்றன.
தேர்வு முறையைப் பொறுத்தவரை, கணினி வழித் தேர்வில் மூன்று தாள்கள் இடம்பெறும். இதில் கட்டாய தமிழ்மொழி தகுதித்தாள், பொது அறிவு தாள் மற்றும் சம்பந்தப்பட்ட பாடத்தாள் ஆகியவை அடங்கும். கட்டாய தமிழ்மொழித் தாளில் குறைந்தபட்சமாக 40 சதவீத மதிப்பெண் பெற்றாலே தேர்ச்சி பெற்றதாக கருதப்படுவார்கள். இந்த தமிழ்த் தாளின் மதிப்பெண்கள் தரவரிசைப் பட்டியலுக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.
ஆனால், தமிழ்த் தாளில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் பெறத் தவறினால், அந்த தேர்வரின் பொது அறிவு மற்றும் பாடத்தேர்வு மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், அனைத்து தேர்வர்களும் கட்டாய தமிழ்த் தாளில் தேர்ச்சி பெறுவதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தியுள்ளது.
இந்த ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு மூலம், அரசு துறைகளில் முக்கியமான பொறுப்புகள் கொண்ட பதவிகள் நிரப்பப்பட உள்ளதால், இளைஞர்கள் மத்தியில் இந்த அறிவிக்கை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அரசு வேலைக்கு தயாராகி வரும் விண்ணப்பதாரர்கள், முழுமையான தகவல்களை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் பார்த்து, உரிய காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications