‛‛6,244 பணிக்கு 20 லட்சம் பேர் போட்டி’’.. தமிழகம் முழுதும் தொடங்கியது டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு
சென்னை: தமிழகம் முழுவதும் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தொடங்கி நடந்து வருகிறது. 6,244 காலி பணியிடங்களுக்கான இந்த தேர்வை இன்று 20 லட்சம் பேர் வரை எழுதுகின்றனர்.
டிஎன்பிஎஸ்சி எனும் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆண்டுதோறும் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் முறையான அறிவிப்புகளுடன் நிரப்பப்பட்டு வருகின்றன. டிஎன்பிஎஸ்சியில் குரூப் 1 முதல் குரூப் 8 வரை பல்வேறு பணிகளுக்கு தேர்வு நடத்தப்படுகிறது.

இந்நிலையில் தான் கடந்த ஜனவரி 30ம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு என்பது வெளியானது. பிப்ரவரி 28ம் தேதி வரை பணிக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் வழங்கப்பட்டது.
மேலும் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ), வனக் காவலர், விஏஓ, பில் கலெக்டர், ஆவின் ஆய்வக உதவியாளர், கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் , இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர் உள்பட பல பிரிவுகளில் மொத்தம் 6,244 பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மாநிலம் முழுவதும் அரசு வேலைக்கு காத்திருப்பவர்கள் விண்ணப்பம் செய்தனர்.
மொத்தம் 20 லட்சம் பேர் விண்ணப்பம் செய்தனர். டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுதுவதற்கான கல்வித்தகுதி என்பது 10ம் வகுப்பு தேர்ச்சி தான். அதோடு இன்டர்வியூ கிடையாது. தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தால் அரசு வேலை என்பது உறுதி. இதனால் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு எப்போதுமே அதிக வரவேற்பு உள்ளது.
மேலும் வழக்கம்போல் விண்ணப்பம் செய்தவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை கடந்தது. குறிப்பாக டிகிரி, என்ஜினியரிங் படித்தவர்களும் அதிகமாக விண்ணப்பம் செய்துள்ளனர். 2 வாரங்களுக்கு முன்பு ஹால்டிக்கெட் என்பது வெளியிடப்பட்டது. இந்நிலையில் தான் இன்று மாநிலம் முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு என்பது நடைபெற உள்ளது. இன்று காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை 3 மணி நேரம் நடைபெறும். இருப்பினும் தேர்வு எழுத செல்பவர்கள் காலை 8.30 மணிக்கே தேர்வு மையத்துக்கு செல்ல வேண்டும்.
இதற்கிடையே தான் இன்று தேர்வு எழுத செல்வோர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் பற்றி டிஎன்பிஎஸ்சி முக்கிய வழிக்காட்டுதல்களை வழங்கி உள்ளது. அதன்படி தேர்வு எழுதுவோர் கருப்புநிற மை கொண்ட பந்துமுனைப் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். விண்ணப்பதாரர்கள், காலை 8.30 மணிக்கு தேர்வுக்கூடத்திற்கு செல்ல வேண்டும். தேர்வறையின் இருக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர், பதிவு எண் மற்றும் புகைப்படத்தையும் சரிபார்த்தப் பின் தங்களுக்கான இடத்தில் அமர வேண்டும்.
விண்ணப்பதாரர்களுக்கு ஓஎம்ஆர் விடைத்தாள் முற்பகல் 9 மணிக்கு வழங்கப்பட்ட பின்னர் விடைத்தாள் நிரப்புவது தொடர்பான அறிவுரைகள் வழங்கப்படும். 9 மணிக்கு பின்னர் வரும் தேர்வர்கள் தேர்வு வளாகத்திற்குள்ளேயும், 12.45 மணிக்கு முன்னர் தேர்வு அறையிலிருந்து வெளியேறி செல்லவும் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
விண்ணப்பதாரர்கள், தேர்வாணையத்தின் இணையதளத்தில் இருந்து டவுன்லோட் செய்யப்பட்ட ஹால் டிக்கெட், ஆதார் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் நிரந்தர கணக்கு எண் வாக்காளர் அடையாள அட்டையின் அசல் அல்லது நகல் கொண்டு செல்ல வேண்டும். தேர்வர்கள் ஓஎம்ஆர் விடைத்தாளில் தேர்வு தொடங்குவதற்கு முன் அதில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளைப் படித்தபின் ஒரு கையொப்பத்தினையும், தேர்வு முடிவடைந்தபின் மற்றொரு கையொப்பத்தினையும் இடவேண்டும்.
தேர்வுக்கூட ஹால்டிக்கெட்டில் தேர்வரின் புகைப்படம் அச்சிடப்படவில்லையெனில், தன்னுடைய பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஒன்றினை ஒரு வெள்ளை காகிதத்தில் ஒட்டி, அதில் தனது பெயர், முகவரி, பதிவு எண்ணை குறிப்பிட்டு, தலைமைக் கண்காணிப்பாளரிடம் சரிபார்க்க வேண்டும். தொலைபேசி, கைக்கடிகாரங்கள், மோதிரங்கள், மின்னணு சாராத பொருள்களான புத்தகங்கள், குறிப்புகள், கைப்பைகள் ஆகியவை அனுமதிக்கப்படமாட்டாது.
இன்று நடக்கும் டிஎன்பிஸ்சி குரூப் 4 தேர்வில் பொது தமிழ் பகுதியில் இருந்து 100 கேள்விகள், பொது அறிவு, நுண்ணறிவுத் திறன் பகுதிகளில் இருந்து 100 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் இடம்பெறும். ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 300 மதிப்பெண்கள் வழங்கப்பட உள்ளது. இதனால் அனைவரும் நிதானமாக பதற்றம் இன்றி தேர்வு எழுதினால் வெற்றி நிச்சயம் கிடைக்கும். அனைவருக்கும் தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகள்.












Click it and Unblock the Notifications