டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு எப்போது? நாளை அதிகாரிகள் முக்கிய ஆலோசனை- விரைவில் அறிவிப்பு?
சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC- டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-4 தேர்வு உள்ளிட்டவைகளை எப்போது நடத்துவது? என்பது குறித்து சென்னையில் நாளை அதிகாரிகள் ஆலோசனை நடத்துகின்றனர். இதனைத் தொடர்ந்து டி.என்.பி.எஸ்.சி. குரூப் தேர்வுகள் தொடர்பான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என கூறப்படுகிறது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் பல்வேறு தேர்வுகளை நடத்தி வருகிறது. ஒரு ஆண்டுக்கு குறைந்தது 35 தேர்வுகளை டி.என்.பி.எஸ்.சி. நடத்துகிறது.
இவைதவிர பதவி உயர்வுகளுக்கான துறைசார் தேர்வுகளையும் டி.என்.பி.எஸ்.சி. நடத்துகிறது. அண்மையில் கல்வித்துறையில் இத்தகைய தேர்வுகள் பல்வேறு குளறுபடிகளுடன் நடத்தி முடிக்கப்பட்டது.

திட்டமிட்டபடி நடைபெறவில்லை
பொதுவாக டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் தொடர்பான விவரங்கள் மொத்தமாக வெளியிடப்பட்டு அதன்படியே நடத்தப்படும். கொரோனா பரவல் காரணமாக பொதுவாக கடந்த 2 ஆண்டுகளாக டி.ஏன்.பி.எஸ்.சி. தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தப்படவில்லை. நடப்பாண்டில் குரூப்1- தேர்வு உள்ளிட்ட சிலவைதான் நடத்தப்பட்டுள்ளது.

குரூப் 4 தேர்வு எப்போது?
தற்போது கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ளது. தமிழகம் முழுவதும் பெரும்பாலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டும்விட்டன. பள்ளிகளும் திறக்கப்பட்டு வருகின்றன. இதனால் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் தொடர்பான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. குறிப்பாக இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்பக் கூடிய டி.என்.பி.எஸ்.சி. குரூப்4 தேர்வுகளை லட்சக்கணக்கானோர் எழுதுவது வழக்கம். அதனால் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு எப்போது என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

சென்னையில் நாளை ஆலோசனை
இந்நிலையில் சென்னையில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் தொடர்பாக நாளை அதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளனர். குரூப் 4 தேர்வு உள்ளிட்டவைகளை எப்போது நடத்தலாம் என்பது குறித்து நாளைய கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. இக்கூட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. தலைவர், செயலாளர், தேர்வு கட்டுப்பாட்டு துறை அலுவலர், உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.

பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்
இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் குரூப் 2, குரூப் 4 தேர்வுகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது. டி.என்.பி.எஸ்.சி. மூலம் ஆண்டுக்கு சுமார் 8,000 பேர் மட்டுமே பணிவாய்ப்பு பெறுகின்றனர். தமிழகம் முழுவதும் பல லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கும் நிலையில் இந்த எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பதும் பொதுமக்களின் கோரிக்கை.












Click it and Unblock the Notifications