குழந்தை நீதி கதைகள்: ஏமாந்து போன திருடன், ரிவென்ஜ் எடுத்தானா? - பாகம் 2
சென்னை: Kids story in Tamil: ஹலோ குட்டீஸ், இந்த கதையை நீங்க படிக்கும்போது ஸ்கூல் முடிஞ்சு வீட்டுக்கு வந்துருப்பீங்க. இப்போ ரிலாக்ஸா நம்ம கதையை படிக்கலாமா? போன வாரம் நம்ம மாயாவை எப்படியாவது ஏமாத்தி திருடிவிடலாம்னு நினைச்ச திருடன் இந்த தடவை வென்றானா? வாங்க கதையை படிச்சு தெரிஞ்சிக்கலாம். அப்புறம் நீங்க இப்போ தான் இந்த கதையை படிக்கிறீங்கன்னா, போன வாரம் கதையை படிச்சிட்டு வாங்க அப்போ தான் இந்த தொடர்ச்சி புரியும்.
சரி மாயா அவளோட நிலத்துல எப்பவும் போல வேலை செய்ய தயாரானாள். திருடன் பல மாதங்கள் கழித்து அந்த ஊருக்கு திருட வந்தான். யாரும் அடையாளம் கண்டுகொள்ளாமல் இருக்க கெட்டப் மாற்றி, ஒரு வியாபாரி போல தன்னை காட்டிக்கொண்டான். ஊருக்குள் நுழைந்ததும் மாயாவை கண்ட அவனுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. நம்ம கஷ்டப்பட்டு நிலத்தை தோண்டினோமே இன்னும் கொஞ்சம் தேடி இருந்தால் புதையல் கிடைத்திருக்கும், தவற விட்டுட்டோமே என வருந்தினான்.

மாயா, கழுத்து கைகளில் ஆபரணங்களை பார்த்த அவனுக்கு எப்படியும் நிறைய புதையல் எடுத்திருப்பாள். எப்படியாவது அந்த பொருட்களை நாம் அடைந்தே ஆக வேண்டும் என மாயாவை நோட்டம் போட்டான். அவள் எப்போதும் போல நிலத்தில் வேலை செய்துவிட்டு அவளது மண்வெட்டி கூடைகளை எடுத்து கொண்டு வீட்டுக்கு திரும்பினாள்.
அவளை நோட்டம் போட்ட திருடன், அவளது கணவனின் சோம்பேறி தனத்தை வைத்து திருடலாம் என முடிவு செய்தான். அன்றிரவே அவளது வீட்டிற்கு சென்றான் திருடன். மாயாவின் கணவனிடம், அய்யா நான் வெகுதொலைவில் இருந்து இந்த சேலைகளை விற்பதற்காக இங்கு வந்தேன். பொழுது சாய்ந்துவிட்டது, உங்கள் வீட்டில் தங்க சிறிது இடம் கிடைக்குமா என்று பவ்யமாக கேட்டான். மாயாவின் கணவன் தான் ஏதும் யோசிக்க மாட்டானே, உடனடியாக சரி என்றான். அறையின் உள்ளிருந்த மாயாவிற்கு இவனை எங்கோ பார்த்தது போல நியாபகம் வந்தது.
மாயாவின் கண்களுக்கு இவனை ஒரு வியாபாரியை போன்று தெரியவில்லை. ஒரு சாயலில் அவளிடம் மாட்டிய அந்த திருடனாகவே தெரிந்தான். சற்று யோசித்த மாயா, கணவனிடம் கொஞ்சம் சத்தமாக திருடனுக்கு கேட்கும்படியாக, உங்கள் அத்தை வீட்டில் தனியாக இருக்கிறார் என்று சொன்னார்களே? மறந்து விட்டீர்களா? உங்கள் மாமா ஏதோ வேலை நிமித்தமாக வெளியூர் சென்றுள்ளாரே என்றாள். அவளது கணவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. மாயா திருடனை நோட்டமிட்டாள். அவன் முகத்தில் ஒரு புன்னகை எட்டி பார்த்தது.
மாயா, மீண்டும் சத்தமாக உங்கள் அத்தைக்கு இருட்டு என்றாள் பயம், இன்றிரவு நம்மை அவருடன் தங்க அழைத்தாரே அங்கு செல்ல வேண்டாமா? என்றாள். மாயாவின் கணவன் புரியாமல் விழித்தான். மாயா நீங்க பயப்படாதீங்க நகைகளை வீட்டின் சுவரில் ஒரு பகுதியில் துளையிட்டு ஒளித்து வைத்துள்ளேன், யாராலும் அதை கண்டுபிடிக்க முடியாது என்றாள்.
ஒன்றுமே புரியாமல் கணவன் திகைத்தான். மாயா அவனை வாங்க என அழைத்து கொண்டு, வியாபாரியிடம் இதில் கொஞ்சம் உணவு இருக்கு நீங்கள் இந்த திண்ணையில் தூங்கி ஓய்வெடுங்கள், நாங்கள் காலையில் உங்களை சந்திக்கிறோம் என்றாள். அவனுக்கு சந்தோசம் தாங்கவில்லை. இருந்தாலும் அவளுக்கு நன்றி சொன்னான். அவள் செய்வதை அறியாமல் கணவன் நின்று கொண்டிருந்தான். அவனை பார்த்து கண்களை உருட்டி முறைத்தாள். அவன் தலையசைக்காமல் அவள் பின்னாடியே நடந்தான்.
முட்டாள் பெண், நகை இருக்கும் இடத்தை இப்படியா சத்தமாக சொல்லுவாள் என்று சிரித்து கொண்டே வீட்டில் தேட தயாரானான் திருடன். ஒவ்வொரு பகுதியாக தட்டி பார்த்தான். துளையிட்டு பார்த்தான் வேலைக்கு ஆகவில்லை. வீட்டை இடிக்க முடிவு செய்து, ஒரு சுவர் விடாமல் இடித்து தரைமட்டமாக்கினான்.
சேவல் கூவியதும்தான் அவனுக்கு புரிந்தது, விடிய விடிய வீட்டை இடித்துள்ளோம் எதுவுமே கிடைக்கவில்லை என்று. சூரிய ஒளி படுவதுபோல் தெரிந்த அவன் தப்பி ஓடினால் போதும் என ஓடினான். மாயாவின் வீடு இடிந்து தரை மட்டமாகி இருந்தது. ஊரே அவள் வீட்டின் முன்புதான் கூடி இருந்தது.

மாயாவும், அவளது கணவனும் திரும்பி வந்தார்கள். கணவன் அதிர்ச்சி ஆகி பார்த்தாயா, இல்லாத அத்தை வீடு என்று கோவிலில் தங்க வைத்தாய். அவன் திருடன் போல மொத்த வீட்டையும் இடித்துவிட்டான் என்றான். அமைதியாக இருந்த மாயாவை ஊர் மக்கள் கேள்வி கேட்டு குடைந்து எடுத்தார்கள். சாந்தமாக பதில் கூறினாள் மாயா.
நிலத்தில் கிடைத்த வருமானத்தை சேர்த்து வைத்து வீடு கட்டுவதற்காக யோசித்து வைத்து இருந்தேன். ஆனால் பழைய வீட்டை இடிக்க வேண்டுமல்லவா, என்ன செய்வது என யோசித்து கொண்டிருக்கும்போதுதான் அந்த திருடனை மீண்டும் பார்த்தேன். அவனது முட்டாள் தனத்தை நான் உபயோகித்து கொண்டேன் என்றாள். ஊர் மக்கள் அவளது புத்திசாலி தனத்தை கண்டு பாராட்டினார்கள்.
திருடனால் மாயாவுக்கு கிடைத்தது பெரிய விஷயம். ஆனால் அவள் திருடனை சரியான முறையில் கையாண்டாள். ஆகையால் குழந்தைகளே உங்களுக்கு வரும் சிக்கலை புத்திசாலி தனமாக நீங்களும் கையாண்டால் வெற்றியாளர் நீங்களே.. அப்புறம் திருடன் ஜெயிக்காம விடமாட்டேன்னு திரும்பவும் அந்த ஊருக்கு வந்தான். அந்த கதையை அடுத்தவாரம் சொல்றேன். இந்த கதை புடிச்சிருந்தா கமெண்ட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications