குழந்தை நீதி கதைகள்: நட்பே நட்பே நட்பில் பாரம்- நல்ல கரடியும் தந்திர நரியும்!
சென்னை: Kids story in Tamil: ஹலோ குட்டீஸ், எப்படி இருக்கீங்க?. வழக்கம் போல ஒரு அழகான காட்டுக்குள்ள உங்கள கூட்டிட்டு போக வந்துருக்கேன். நம்ம வாழ்க்கைல நட்பு எவ்வளவு முக்கியம். அதிலும் நல்லவர்கள் நட்பு நம்மோட வாழ்க்கைல மிகவும் முக்கியம்ங்கறதை பத்தி ஒரு குட்டி கதை சொல்றேன். வாங்க
ஒரு அழகான காடு. அங்க விலங்கினங்களும் பறவையினங்களும் சந்தோசமா வாழ்ந்துகொண்டு இருந்தன.ஒரு இடத்துல நல்லவர்கள் இருந்தாங்கன்னா கண்டிப்பா தீய எண்ணம் படைச்சவங்களும் இருப்பாங்க இல்லையா. அந்த காட்டுல பெரும்பாலான உயிரினங்கள் நல்லகுணம் கொண்டவைகளாக இருந்தன. அதிலும் ஒரு கரடி மிகவும் நல்ல குணம் கொண்டது. நம்மோட இருக்கும் உயிரினங்கள் நமக்கு சகோதரர்கள் என்று அனைவரிடமும் அன்பாக பழகும். அதனால் இந்த கரடியை எல்லா உயிரினங்களுக்கும் பிடிக்கும். குறிப்பாக ஒரு நரி அந்த கரடிக்கு நண்பனாக இருந்துச்சு. ஆனா நரியின் குணம் கரடிக்கு நேர்மாறு. தீயவழியில என்னென்னலாம் செய்யலாம் என்று யோசிக்கும். மற்றவர்கள் உழைப்பை திருடும். பசியில சில அப்பாவி உயிரினங்களையும் சாப்பிடும். இதனால் மற்ற உயிரினங்கள் நரியின் மேல் எரிச்சலாய் இருந்தன. எப்போ அந்த நரியை காட்டைவிட்டு விரட்டுவது என்று யோசித்துக்கொண்டு இருந்தன.

அதற்கு தடையாக இருந்தது நம்ம கரடி தான். யாரிடம் எப்படி இருந்தாலும் நரி கரடியிடம் இதுவரைக்கும் ஒரு நல்ல நண்பனாய் இருந்துச்சு. அதனால் கரடி மற்றவர்கள் சொல்லுக்கு காதுகொடுக்கவில்லை.கரடியிடம் ஒரு அழகிய குட்டிமயில் நட்பாக இருந்துச்சு. அது கரடியிடம், "கரடி மாமா, உங்க நண்பன் நரி. வரவர எல்லாருக்கும் அதிகப்படியாக கஷ்டங்கள் தருது. எங்களால பொறுக்க முடில. எல்லாரும் சேர்ந்து அந்த நரியை விரட்ட முடிவு செய்திருக்கிறோம். "என்றது. கரடி அதற்கு, "தம்பி, எல்லாரும் ஒரே மாதிரி இருக்கமாட்டாங்க. நரி நல்லவன் தான். நான் பேசிபாக்கிறேன். நரி புரிஞ்சுக்கும்" என்றது. "தயவு செய்து மாமா ". நரி மாறல. நீங்களும் ஒப்புகொள்ளல என்றால், நாங்களே வேற காட்டுக்கு போய்விடுவோம் என்றது மயில் சோகமாக. அதற்கு கரடியோ, "யாரும் போகவேண்டாம். எல்லாம் சரி ஆகும்" என்றது. மயில் விடைபெற்றது.

கரடிக்கு கவலை அதிகமானது.நரியை சொல்லி திருத்துவதை விட, செயலில் திருத்த கரடி முடிவுசெய்தது. அதேநாள்,நரி கரடியை பாக்கவந்துச்சு. நரியை பார்த்த கரடி சொன்னது, "நண்பா உங்கிட்ட ஒரு விஷயம் பேசணும்னு" சொல்லுச்சு. நரியோ, "சொல்லு நண்பா" என்றது சற்று குழப்பத்துடன். கரடி, "காலம் மாற மாற இந்த மனிதர்களால் நம்ம காடு அழிவைநோக்கி போகுது. நமக்கும் சரிவர உணவு கிடைக்க மாட்டேங்குது. அதனால் நம்மோட எண்ணங்களும் மாறிபோகுது. மனிதர்கள் அழிக்கும் காட்டை நாம தான் பாதுகாக்கணும் இல்லையா! அதனால என்கிட்ட ஒரு யோசனை இருக்கு சொல்லவா? என்றது நரி ஆச்சரியத்துடன், "என்ன யோசனை" என்றது. "நமக்கு தேவையான உணவை நாமே தயாரிப்போம். அதாவது விவசாயம் செய்வோம்" என்றது கரடி. நரிக்கு மகிழ்ச்சி. உடனே "சரி நண்பா. வேலையை சீக்கரம் தொடங்கலாம்" என்றது. நரியின் உள்ளுணர்வு கரடிக்கு அப்போது தெரியவில்லை.
மறுநாள் இருவரும் ஒரு இடத்தை தேர்வுசெய்தார்கள். அந்த இடத்தை சுத்தம் செய்து. உழுதார்கள். விளைச்சல் செய்வதற்கு முன்னால் நரி கரடியிடம் சொன்னது. " நண்பா விவசாயம் செய்து வரும் அறுவடையில் நாம சரிபாதியாக பிரித்து கொள்வோம். அதாவது நிலத்திற்கு மேலே விளையும் அனைத்தையும் நான் எடுத்து கொள்கிறேன். கீழே விளைவதை நீ எடுத்து கொள் என்றது. எதையும் யோசிக்காமல் கரடி அதற்கு சம்மதித்தது.

நரி சோள விதையை விதைத்தது. கரடி நரியை விட அதிகமா உழைத்தது. இரவு பகலாக உழைத்தது. இரண்டும் முதல் அறுவடைக்கு காத்துகொண்டு இருந்தன. அறுவடையில் நிலத்திற்கு மேலே விளைந்த அனைத்து சோள முத்துக்களையும் நரி எடுத்து கொண்டது. கரடிக்கு வெறும் வேர்கள்தான் மிஞ்சின. கடுமையாக உழைத்த கரடிக்கு ஒரு சோள கருது கூட கிடைக்கவில்லை. நரியும் தரவில்லை, கரடி சோகமானது. நரி தந்திரமாக கரடியை ஏமாற்றியது. நட்பினால் யோசிக்காத கரடி தன்னை நரி ஏமாற்றியதை உணர்ந்தது. இப்போதுதான் மற்ற உயிரினங்களின் சொற்களை யோசித்து பார்த்தது. தன் முட்டாள்தனத்தை எண்ணி வருந்தியது கரடி.
கதை எப்படி இருந்துச்சு குட்டிஸ். நல்ல நண்பர்களை கூட வைத்திருக்கணும். தீயவர்களிடம் வைத்திருக்கும் நட்பு ஒருநாள் நமக்கே கவலையாக மாறும்ங்கிறது புரிஞ்சுதா. நீங்களும் இனி தீயவர்களிடம் பழகுவதை விட்டுவிடுங்கள். கூடா நட்பு கேடாய் முடியும்












Click it and Unblock the Notifications