குழந்தை நீதி கதைகள்: திரும்புற பக்கமெல்லாம் கன்னிவெடியா.. அந்த பரிசால் வாழ்க்கை மாறியதா?
சென்னை: Kids story in Tamil: ஹாய் சுட்டீஸ், எப்படி இருக்கீங்க, ஸ்கூல் எப்படி போகுது? மழை பெய்து இதமான காற்றுடன் ஜாலியாக இருக்கிறீர்களா.. சரி ஒரு மனுஷனுக்கு அடிவிழலாம் ஆனா இப்படி விழலாமா? வாங்க அப்படியே ஜாலியா இந்த கதையை படிச்சு என்னாச்சுனு தெரிஞ்சிக்கலாம்.
ஊட்டி போல அழகான மலை பிரதேசம் உள்ள ஊர் அது. அங்கு மதர் கின்லி வாழ்ந்து வந்தார். அவர் சில குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்தும் வந்தார். அவருக்கு பிறந்த நாள் கொண்டாட அந்த சிறுவர்கள் ஆசைப்பட்டார்கள். ஆகையால் அவருக்கு தெரியாமல் ஏதாவது செய்ய வேண்டும் என அவர்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.

மதர் கின்லி, சில காலமாகவே சோகமாக இருந்தார். அதற்கு காரணம் அவர் வாழ்க்கையில் கடந்த சில காலமாக நடந்த சில சோகமான நிகழ்வுகள் தான். அவர் ஆசையாக வளர்த்த மகள் ஒருவனை காதலித்து அங்கிருந்து சென்றுவிட்டாள். அதன் பிறகு மதர் கின்லியை அவள் திரும்பி பார்க்கவில்லை. மகளை பிரிந்த சோகத்தில் அவருக்கு உடல் நிலை பயங்கரமாக பாதிக்கப்பட்டது.
ஒருநாள் சோகத்தில் அடுப்பில் எறிந்த விறகுகளை அணைக்க மறந்துவிட்டார். அதனால் அவரது வீடு மொத்தமாக எரிந்து சாம்பலானது. அதன் பிறகு குழந்தைகளுடன் ஆசிரமத்திலேயே தங்கினார். தான் ஆசையாக வளர்த்த மோக்லி என்ற நாயை பராமரிக்க முடியாமல் போனது. அதனால் அது குளிரில் நடுங்கி உடல் விறைத்து இறந்து போனது.
இது எல்லாவற்றையும் விட அவர் தன்னுடனே வைத்து வளர்த்து வந்த புஷி என்ற பூனை திடீரென ஒருநாள் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டது. எங்கு தேடியும் அது கிடைக்கவில்லை. பிறகு காட்டுக்குள் சில நாய்கள் அதை கடித்து கொன்று போட்டுவிட்டதாக செய்திகள் வந்தன. தன்னுடன் யாரும் நிரந்தரமாய் இருக்க மாட்டார்கள் என முழு சோகத்தில் மூழ்கினார் மதர்.

இந்த சமயத்தில் தான் அவரது பிறந்தநாளை கொண்டாட ஆசிரமத்தில் இருந்த குழந்தைகள் ஆசைப்பட்டார்கள். எல்லோரிடமும் சேர்த்து வைத்த காசு இருந்ததால் அவருக்கு என்ன தேவை என யோசித்து பேசி முடிவு செய்தார்கள். அப்போது டாம் மட்டும் பொருளாக இல்லாமல் மதரின் சந்தோஷம் திரும்ப கிடைக்க என்ன செய்யலாம் என யோசித்தான்.
மற்றவர்களிடம் இதைப்பற்றி சொன்னால், அதெல்லாம் இல்லை நாங்கள் வாங்கி கொடுப்பதை பார்த்தே மதர் சந்தோஷமாக இருப்பார் என்றார்கள். அப்போது அங்கிருந்து இன்னொரு சிஸ்டரிடம் டாம் சென்று, என்ன செய்யலாம் என்று சொல்ல அவர் ஒரு யோசனை கூறினார்.
மதர் கின்லியின் பிறந்த நாளுக்கும் நாட்கள் குறைவாக இருந்தது. அது இலையுதிர் காலம் வேறு. டாம் தினம் காட்டுக்குள் சென்று ஏதோ சாக்குப்பைக்குள் போட்டு சேர்த்து வந்தான். மற்றவர்கள் அவனிடம் அதற்குள் என்ன இருக்கிறது என்று கேட்க அது மதரின் சந்தோஷம் என்று பதிலளித்தான்.
யாருக்குமே ஒன்றும் புரியவில்லை. இன்னும் 100 தான் என சொல்லி சென்றான். ஒருநாள் இவன் மரத்தடியில் துள்ளி குதித்து ஏதோ எண்ணுவதை மதர் கின்லி பார்த்தார். 25, 24, 23 என அவன் சத்தம் கேட்டது. ஏதோ விளையாடுகிறான் என மதர் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
மதர் கின்லி பிறந்த நாள் வந்தது. ஒவ்வொருவரும் தங்கள் பரிசு பொருட்களை கொடுக்க ஆரம்பித்தார்கள். சால்வை, குஷன் தலையணை, கோழி முட்டைகள், பழங்கள், மணிக்கு ஒருமுறை குருவி கத்தும் சுவர் கடிகாரங்கள் என வித விதமான பொருட்களை கொடுத்தார்கள். டாம் மட்டும் ஒரு சாக்கை தூக்க முடியாமல் தூக்கி வந்தான்.
என்னடா இது என்று மதர் கேட்க, 365 நாளும் நீங்கள் சந்தோஷமாக இருக்க எனது கிப்ட் என்றான். அந்த சாக்கை திறந்து பார்த்தால் உள்ளே காய்ந்து விழுந்த இலைகள். காய்ந்த இலைகளா என்று கேட்க, ஆமாம் மதர். இவை மரத்தில் இருந்து கீழே விழுவதற்குள் நான் உங்களுக்காக பிடித்து எடுத்து சேர்த்துள்ளேன் என்றான். இதில் மொத்தம் 365 இலைகள் உள்ளன. இனி வரப்போகும் 365 நாளும் நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றான்.
அவன் செய்தது வெகுளித்தனமாக இருந்தாலும், அவர்கள் நாட்டில் அப்படி காற்றில் மிதக்கும் இலைகளை இலையுதிர் காலத்தில் பிடித்தால் மகிழ்ச்சி பொங்கும், அதிர்ஷ்டம் கிடைக்கும் என பல விதங்களில் முன்னோர்கள் கூறியுள்ளார்கள் என மதர் கின்லி தெரிவித்தார். டாமை கட்டி தழுவி முத்தமிட்டார் மதர்.
அவன் கொடுத்த இலைகளில் அதிர்ஷ்டம் இருந்ததா என்பது தெரியவில்லை. ஆனால் அவனின் அந்த செயலில் உண்மையான அன்பு நிறையவே இருந்தது. அதன் பின் வந்த நாட்களில் முன்பை விட கின்லி மகிழ்ச்சியாக இருந்தார். சந்தோஷமாக அவர் வாழ்க்கையை வாழ்ந்தார்.












Click it and Unblock the Notifications