வந்தே பாரத்.. நெல்லை, பொதிகை, பாண்டியன், வைகை மைண்ட் வாய்ஸ்.. இவங்கதான் வெளியூர் ஆட்டக்காரங்களோ
சென்னை: வந்தே பாரத் ரயில் தண்டவாளத்தில் ஓடத்தொடங்கிய நாளில் இருந்தே அதைப்பற்றிய செய்திகள் வெளியாகிக்கொண்டுதான் இருக்கின்றன. சென்னை திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரயில் வந்த பிறகு பாண்டியன், நெல்லை, பொதிகை, வைகை எக்ஸ்பிரஸ் ரயில்கள் மைண்ட் வாய்ஸ் எப்படி இருக்கும் என்று நச் என்று மீம்ஸ் ஆக பதிவிட்டுள்ளார் ஒரு மீம்ஸ் கிரியேட்டர்.
வந்தே பாரத் ரயில் கடந்த 24ஆம் தேதி சென்னை திருநெல்வேலி இடையே இயக்கப்பட்டது. இந்த ரயிலுக்கு வரவேற்பு அதிகமாக இருக்கும் அதே நேரத்தில் இதற்காக பிற ரயில்களின் நேரம் மாற்றப்படுவதாக தகவல் வெளியானது.

சென்னை - செங்கோட்டை - சென்னை பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் மதுரை - செங்கோட்டை இடையே இதுவரை டீசல் இன்ஜின் மூலம் இயக்கப்பட்டு வந்தது. தற்பொழுது இந்தப் பகுதியில் இந்த ரயிலுக்கு மின்சார எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளதால் கால அட்டவணையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
வைகை எக்ஸ்பிரஸ் ரயில் இதுவரை காலை 7:10 மணிக்கு மதுரையிலிருந்து புறப்பட்டு மதியம் 2:30 மணிக்கு சென்னை செல்லும் தற்பொழுது வந்தே பாரத் ரயில் நெல்லை- சென்னை இயக்கப்படுவதால் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் காலை 6:40 மணிக்கு புறப்பட்டு மதியம் 2:10 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் மதுரையில் இருந்து வைகை ரயில் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது ஆனால் சென்னையில் இருந்து புறப்படும் நேரத்தில் மாற்றம் இல்லை என்றும் ரயில்வே துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் நேரத்தை மாற்றக்கூடாது என்பது மதுரை ரயில் பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.
கடந்த சில நாட்களாவே மாலை நேரங்களில் வந்தே பாரத் ரயில் திருச்சியை கடக்கும் போது வைகை எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சியில் அரை மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும் தகவல் வெளியானது. எனவே தினசரியும் ஏராளமானோர் பயணம் செய்யும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் நேரத்தை மாற்றக்கூடாது என்று பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
செங்கோட்டை - சென்னை எழும்பூர் பொதிகை எக்ஸ்பிரஸ் (12662) மதுரையிலிருந்து இரவு 09.55 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக இரவு 09.45 மணிக்கு 10 நிமிடம் முன்னதாக புறப்படும். மறு மார்க்கத்தில் சென்னை எழும்பூர் - செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் (12661) மதுரையிலிருந்து அதிகாலை 04.45 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக அதிகாலை 04.30 மணிக்கு 15 நிமிடம் முன்னதாக புறப்படும்.

மதுரை - கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ் (16722) மதுரையிலிருந்து காலை 07.25 மணிக்கு பதிலாக காலை 07.00 மணிக்கு 25 நிமிடம் முன்னதாக புறப்படும்.
மதுரை - சென்னை எழும்பூர் பாண்டியன் எக்ஸ்பிரஸ் (12638) மதுரையிலிருந்து இரவு 09.35 மணிக்கு பதிலாக இரவு 09.20 மணிக்கு 15 நிமிடங்கள் முன்னதாக புறப்படும்.
மதுரை - விழுப்புரம் எக்ஸ்பிரஸ் (16868) மதுரையிலிருந்து அதிகாலை 04.05 மணிக்கு பதிலாக அதிகாலை 03.35 மணிக்கு 30 நிமிடங்கள் முன்னதாக புறப்படும். இந்த கால அட்டவணை மாற்றம் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வந்தே பாரத் வந்த பிறகு அதற்கு கிடைத்து வரும் வரவேற்பை பார்த்து கரகாட்டக்காரன் படத்தில் ராமராஜனைப் பார்த்து இவங்கதான் வெளியூர் ஆட்டக்காரங்களோ? என்று கேட்பாரோ அதுபோல நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் கேட்பதாக மீம்ஸ் பதிவிட்டுள்ளார் ஒரு மீம்ஸ் கிரியேட்டர். இதுவும் ரசிக்கும் வகையில்தான் உள்ளது. வந்தே பாரத் வந்த பிறகு மதுரையை கடந்து செல்லும் ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளதால் அந்த ரயில்களின் மைண்ட் வாய்ஸ் அத்தனையும் இவங்கதான் வெளியூர் ஆட்டக்காரங்களோ.. என்று தான் யோசிக்கும்.












Click it and Unblock the Notifications