பிரதமர் மோடி இல்லாமலா.. நிச்சயம் அவரை அழைப்பேன்! மத்திய அமைச்சரிடம் உறுதி கொடுத்த ஸ்டாலின்!

பிரதமரையும், உங்களையும் உறுதியாக அழைப்போம், வருவீர்கள், நிகழ்ச்சியை சிறப்பிப்பீர்கள் என பியூஷ் கோயலிடம் உறுதி கொடுத்த ஸ்டாலின்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: விருதுநகர் மாவட்டத்தில் அமையப்பெறவுள்ள, பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்கா (பி.எம்.மித்ரா) திறப்பு விழாவுக்கு நிச்சயம் பிரதமர் மோடியை அழைப்பேன் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம் முதல்வர் ஸ்டாலின் உறுதிக்கொடுத்துள்ளார்.

இந்தியாவில் முதலாவதாக பி.எம். மித்ரா-பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்கா விருதுநகர் மாவட்டத்தில் அமைப்பதற்கான தொடக்க விழாவில் பேசிய அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும், அந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு;

வேளாண்மைக்கு அடுத்தபடியாக, அதிக வேலைவாய்ப்பை அளிக்கும் தொழிலாக, நெசவுத் தொழில் திகழ்ந்து வருவதை நாம் பார்க்கிறோம். அப்படிப்பட்ட நெசவுத் தொழில் இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றி வருகிறது.

அத்தகைய சிறப்பு வாய்ந்த ஆடை உற்பத்திக்குப் பெருமை சேர்க்கும் வகையில் விருதுநகர் மாவட்டத்தில் அமையவுள்ள, ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்காவின் தொடக்க விழாவில் கலந்துகொண்டு உங்கள் அனைவரையும் சந்திக்கக்கூடிய வாய்ப்பை பெற்றமைக்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

தமிழ்நாட்டில், விருதுநகர் மாவட்டம், இ.குமாரலிங்கபுரத்தில் பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்கா (PM MITRA) அமைக்கப்படும் என்று அறிவித்த இந்திய நாட்டின் பிரதமர் மாண்புமிகு திரு. நரேந்திர மோடி அவர்களுக்கும், ஒன்றிய அமைச்சர் மாண்புமிகு என்னுடைய பெருமதிப்பிற்குரிய திரு. பியூஷ் கோயல் அவர்களுக்கும் முதலில் என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

அவர் பேசுகிற போது சொன்னார், மாவட்டத்தைச் சார்ந்த அமைச்சர்கள் திரு. இராமச்சந்திரன் அவர்களுக்கும், திரு. தங்கம் தென்னரசு அவர்களுக்கும் பெருமகிழ்ச்சி ஏற்பட்டு இருக்கும் என்று. அவருக்கு மட்டுமல்ல, முதலமைச்சர் என்கின்ற முறையில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சி.

Mk Stalin says, he will definitely invite Modi to the inauguration ceremony of PM Mitra park to be established in Virudhunagar district

தொழில் துறையைப் பொறுத்தவரையில், இந்திய அளவில் மட்டுமல்லாமல், உலக அளவிலான கவனத்தைத் தமிழ்நாடு ஈர்த்துள்ளது. அந்தத் தொழில் துறையில் ஜவுளி வர்த்தகமும் முக்கியமானதாகும்.

நம் நாட்டின் கைத்தறித் துணி வர்த்தகத்தில், தமிழ்நாடு மூன்றில் ஒரு பங்கு வகிக்கிறது. பெருமளவு பருத்தி நூல் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி செய்யும் மாநிலமாக தமிழ்நாடு இருப்பதால், தமிழ்நாடு 'இந்திய நாட்டின் நூல் களஞ்சியம்' என அழைக்கப்படுவதோடு, நூற்பு, கைத்தறி நெசவு, விசைத்தறி நெசவு, ஆயத்த ஆடை மற்றும் ஆடைத் தயாரிப்பில் முதன்மையான மாநிலமாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது.

தொழிற்சாலைகளுக்குத் தேவையான நிலம், சிறப்பான தொழில் கொள்கை, கல்வி மற்றும் ஆராய்ச்சி, முதலீட்டுக்கான உகந்த சூழல், உறுதியான உட்கட்டமைப்பு போன்ற அம்சங்களை தமிழ்நாடு கொண்டுள்ளதால், ஜவுளி மற்றும் ஆடைத் தயாரிப்பில் பெருமளவு முதலீட்டை ஈர்க்கும் வாய்ப்பினை இயற்கையாகவே பெற்றுள்ளது.

இதனை நன்குணர்ந்த முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள், தொழில் துறையில் பல்வேறு சிறப்பான திட்டங்களைத் தீட்டி, மாநிலத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றினார் என்பதை யாராலும் மறுக்க இயலாது. அந்த வகையில், 1971-ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களால் தொடங்கப்பட்ட சிப்காட் நிறுவனம், தற்போது அரை நூற்றாண்டைக் கடந்து, தமிழ்நாட்டின் தொழில் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து பெரும்பங்காற்றி வருகிறது.

சிப்காட் நிறுவனம் தமிழ்நாட்டில் பெரிய மற்றும் நடுத்தரத் தொழில்கள் உடனடியாக தொடங்கிட ஏதுவாக தொழில் வாய்ப்புள்ள பகுதிகளில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய தொழிற்பூங்காக்களை ஏற்படுத்தி, பராமரித்து வருகிறது.

இந்நிறுவனம், இதுநாள் வரை, 6 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உட்பட 28 தொழிற் பூங்காக்களை, மொத்தம் 38 ஆயிரத்து 522 ஏக்கரில் ஏற்படுத்தியுள்ளது.

இத்தொழிற் பூங்காக்களில் தற்போது 2 ஆயிரத்து 890 நிறுவனங்கள், 3 இலட்சத்து 94 ஆயிரத்து 785 பணியாளர்களுடன் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.

மேலும், தொழில் முனைவோரின் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் விதமாக சிப்காட் ஓசூர் மற்றும் திருபெரும்புதூர் தொழில் பூங்காக்களில் ஏற்படுத்தப்பட்ட தொழில் புத்தாக்க மையங்கள் (Innovation Centres) என்னால் 24.6.2022 அன்று துவக்கி வைக்கப்பட்டு, பயன்பாட்டில் இருந்து வருகிறது.

தொழில் வளர்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, குறிப்பாக, தென் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்து எங்களுடைய தமிழ்நாடு அரசு செயலாற்றி வருகிறது.

கடந்த ஆண்டு சிப்காட் தூத்துக்குடியில் 1,152 ஏக்கர் பரப்பளவில் 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மரக்கலன் பூங்கா (Furniture Park) என்னால் அடிக்கல் நாட்டப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம், எறையூரில் 244 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு தொழிற்பூங்கா ஒன்றினை கடந்த 20.11.2022 அன்று துவக்கி வைத்திருக்கிறேன்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் 1077 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு தொழிற்பூங்கா இந்த அரசால் கடந்த 29.12.2022 அன்று துவக்கிவைக்கப்பட்டுள்ளது.

இதற்கெல்லாம் மகுடம் வைப்பதைப் போல, விருதுநகர் மாவட்டத்தில் சிப்காட் நிறுவனத்தின் மூலம் அமையப்பெறவுள்ள, பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்கா (பி.எம். மித்ரா பூங்கா) திகழப் போகிறது.

பிரதமரையும் என்னையும் அழைக்க வேண்டும் என்று நம்முடைய ஒன்றிய அமைச்சர் அவர்கள் பேசுகிற போது ஒரு வேண்டுகோளை எடுத்து வைத்தார். நிச்சயமாக, உறுதியாக அழைப்போம், வருவீர்கள், அந்த நிகழ்ச்சியை சிறப்பிப்பீர்கள்.

இந்த ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்கா திட்டத்தினை, தமிழ்நாட்டில் சிப்காட் நிறுவனத்தின் மூலம் செயல்படுத்திட வேண்டுமென்று நான் கடந்த 18 ஆம் தேதியன்று மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களுக்கும், மாண்புமிகு ஒன்றிய தொழில் மற்றும் வர்த்தகத் துறை
அமைச்சர் அவர்களுக்கும் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தேன்.

இதனை மாண்புமிகு தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் அவர்களுக்கு இந்த நேரத்தில் நினைவூட்ட விரும்புகிறேன். இந்தக் கோரிக்கையை ஒன்றிய அரசு கனிவுடன் பரிசீலிக்க வேண்டுமென்று இந்த நேரத்தில் நான் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.

ஒன்றிய அரசு இந்தப் பூங்காவிற்கு அனுமதி அளித்துள்ள 500 கோடி ரூபாய் மானியத்துடன், மொத்தம் 2 ஆயிரம் கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட இருக்கின்றன.

இந்தப் பூங்கா முழு அளவில் செயல்படும்போது, சுமார் 2 இலட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப் பெறுவதோடு, தென்மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் ஊக்கமளிப்பதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

தமிழ்நாடு அரசின் சார்பில் சேலத்தில் மாபெரும் ஜவுளி பூங்கா அமைக்க திட்டமிட்டுள்ளோம் என்பதை அரசின் நிதிநிலை அறிக்கை மூலமாக இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவித்துள்ளோம்.

10 சிறிய கைத்தறி பூங்காக்கள் அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளோம்.

Mk Stalin says, he will definitely invite Modi to the inauguration ceremony of PM Mitra park to be established in Virudhunagar district

தமிழ்நாட்டில் கிடைக்கப்பெறும் அனைத்துத் தொழில் வாய்ப்புகளையும், தொழில் நிறுவனங்களும், தொழில் முனைவோர்களும் பயன்படுத்திக் கொண்டு, நாம் நிர்ணயித்துள்ள இலக்கான, 2030-2031 ஆண்டுக்குள், தமிழ்நாட்டில் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சியினை எய்திட அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன்.

அனைத்துத் தரப்பு முதலீட்டாளர்களும், வெளிமாநில மற்றும் வெளிநாட்டு தொழில்முனைவோர்கள் அனைவரும் தமிழ்நாட்டில் முதலீடு செய்து தொழில்நுட்ப ஜவுளித் தொழில் வளர்ச்சிக்கு உதவிட வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

சேலத்தில் அமையவுள்ள ஜவுளிப் பூங்காவிற்கு ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா திட்டம் (SITP) மற்றும் ஒருங்கிணைந்த செயலாக்க மேம்பாட்டுத் திட்டத்திலிருந்து (IPDS) ஒன்றிய அரசின் நிதியை வழங்க வேண்டும் என்று இந்த நேரத்தில் நான் ஒரு கோரிக்கையை வைக்க விரும்புகிறேன். இத்திட்டத்திற்காக மாநில அரசின் சார்பில் ஏற்கனவே 119 ஏக்கர் நிலத்தினை ஒதுக்கீடு செய்துள்ளதோடு, திட்ட செலவிலும் 25 விழுக்காட்டை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம். எனவே, மாண்புமிகு பிரதமர் அவர்களும், மாண்புமிகு ஜவுளித் துறை அமைச்சர் அவர்களும் எங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றி, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உதவிட வேண்டுமென்று உரிமையோடு நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.

இந்திய அளவில் மட்டுமல்லாமல், தெற்காசியாவிலேயே, தொழில் வளர்ச்சியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிட, நாம் அனைவரும் இணைந்து, அந்த இலட்சிய இலக்கினை அடைவதற்கு பாடுபட வேண்டுமென்று கேட்டு, இந்த அளவில் எனது உரையை நிறைவு செய்கின்றேன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+