ஐபிஎஸ் அதிகாரியான மகளுக்கு சல்யூட் அடித்த துணை கமிஷனர்.. ஹைதராபாத்தில் நெகிழ்ச்சி!!
ஹைதராபாத்தில் ஐபிஎஸ் அதிகாரியான தனது மகளுக்கு துணை கமிஷனரான தந்தை சல்யூட் அடித்த நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஹைதராபாத்: ஐபிஎஸ் அதிகாரியான தனது மகளுக்கு துணை கமிஷனரான தந்தை சல்யூட் அடித்த நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஒவ்வொரு பெற்றோரும் தன் பிள்ளைகள் தான் பட்ட கஷ்டத்தை படக்கூடாது. பிள்ளைகள் நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்றுதான் விரும்புவார்கள்.
அதற்காக அவர்கள் செய்யும் தியாகங்களும் ஏராளம். இந்நிலையில் ஹைதராபாத்தில் தந்தை ஒருவர் காவல்துறையில் தன்னைவிட உயர் பதவியில் உள்ள மகளுக்கு சல்யூட் அடித்து தனது கனவு பலனை அடைந்துள்ளார்.

தந்தை துணை கமிஷனர்
தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் மல்காஜ்கிரி என்ற பகுதியில் துணை போலீஸ் கமிஷனராக பணியாற்றி வருபவர் உமாமகேஸ்வரா சர்மா. சப் - இன்ஸ்பெக்டராக போலீஸ் பணியில் சேர்ந்த இவர் தற்போது போலீஸ் துணை கமிஷனராக உள்ளார்.

அண்மையில் பதவி உயர்வு
அம்மாநில காவல்துறையில் தொடர்ந்து 30 ஆண்டுகளாக பணியில் உள்ளார். இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்புதான் ஐ.பி.எஸ்., பதவி உயர்வு கிடைத்தது.

மகள் ஐபிஎஸ் அதிகாரி
அடுத்த ஆண்டு பணி ஓய்வு பெற உள்ளார். இவருக்கு சிந்து சர்மா என்ற மகள் உள்ளார். ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற சிந்து 2014ம் ஆண்டு ஐ.பி.எஸ்., பணியில் சேர்ந்தார்.

ஆளும் கட்சி கூட்டம்
தற்போது தெலுங்கானா மாநிலம், ஜக்தியால் மாவட்ட எஸ்.பி.,யாக பணியாற்றி வருகிறார். ஹைதராபாத்தின் புறநகர் பகுதியில் நேற்று ஆளும் கட்சியான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியின் பொது கூட்டம் நடைபெற்றது.

தந்தையும் மகளும்
இதில் பாதுகாப்பு பணியில் தந்தையும், மகளும் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

சல்யூட் அடித்த அப்பா
சொந்த மகள் என்றாலும், உயர் அதிகாரி என்பதால், உமா மகேஸ்வரா சர்மாவுக்கு சல்யூட் அடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நேருக்கு நேராக தன்னை சந்தித்த உயர் அதிகாரியான மகளுக்கு கம்பீரமாக சல்யூட் அடித்தார் உமா மகேஸ்வரா சர்மா.

ஆர்வத்துடன் இருந்தேன்
இதை பார்த்த சக போலீசார் வியப்படைந்தனர். இது குறித்து பேசிய உமா மகேஸ்வரா சர்மா பணியில் இருக்கு போது நாங்கள் இருவரும் நேருக்கு நேர் சந்தித்தது இதுவே முதல் முறை. மகளுடன் சேர்ந்த பணியாற்ற மிகவும் ஆர்வத்துடன் இருந்தேன் என மகிழ்ச்சி பொங்க கூறினார்.

வீட்டில் தந்தை மகள்
மகளாக இருந்தாலும் பணியில் அவர் எனக்கு உயர் அதிகாரி. எனவே, நேரில் பார்த்த போது சல்யூட் அடித்தேன். எனினும், வீட்டில் தந்தை, மகள் போலவே இருப்போம்' என்றார்.

எந்த தந்தைக்குதான் தோன்றாது?
தன்னைவிட உயர் பதவியில் நல்ல நிலையில் இருக்கும் மகளுக்கு சல்யூட் அடித்ததை பெருமையாக நினைப்பதாகவும் உமா மகேஸ்வர ராவ் தெரிவித்தார். தன்னைவிட பெரிய அதிகாரியாக மகளை பார்க்க வேண்டும் என்ற தந்தையின் கனவு மெய்ப்படும்போது, அவருக்கு கீழ் ஆனந்தமாய் பணியாற்ற எந்த தந்தைக்குதான் தோன்றாது?!!












Click it and Unblock the Notifications