ரோஜா செய்த காரியம் இருக்கே.. சூப்பர்.. இதுக்கெல்லாம் தயங்கினா எப்படி.. ஆச்சரியமான பணியாளர்கள்!
தூய்மை பணியாளர்களின் அச்சத்தை நடிகை ரோஜா போக்கினார்
ஹைதராபாத்: எல்லாருமே பயந்து கொண்டு தயங்கி நின்றனர்.. கிருமிநாசினியை தெளிக்க அச்சத்தால் பின் வாங்கினர்.. ஆனால் தைரியமாக முன்னே சென்று கிருமிநாசினி மெஷினை எடுத்து தெளிக்க ஆரம்பித்துவிட்டார் எம்எல்ஏ ரோஜா.. அங்கிருந்த தூய்மை பணியாளர்கள் ரோஜாவின் இந்த துணிச்சலை கண்டு அவருடன் இணைந்து கிருமிநாசினி தெளிக்கும் வேலையில் இறங்கினர்!
கொரோனவைரஸ் பயங்கரமான தொற்றாக உள்ளது.. இதன் அறிகுறிகள் சாதாரணமாக நமக்கு வரக்கூடிய ஒன்றாக உள்ளதால், இந்த பயம் அதிகமாக பீடித்து வருகிறது.
இதற்கு இன்னமும் மருந்து கண்டுபிடிக்க முடியாதது மேலும் பயத்தை கூட்டி வருகிறது. அதனால் தொற்று ஏற்படாமல் காத்து கொள்வதே இப்போதைக்கு சிறந்த வழி என்று கூறப்படுகிறது.

நகரி தொகுதி
இந்த தொற்றை பொருட்படுத்தாமல், தங்கள் உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும் எத்தனையோ டாக்டர்கள், நர்ஸ்கள், தூய்மை பணியாளர்கள் சேவையாற்றி வருகின்றனர். இந்நிலையில் நகரி தொகுதியில் நடந்த ஒரு சம்பவம் அனைவரையும் புல்லரிக்க வைத்துள்ளது.. இதற்கு காரணம் எம்எல்ஏ ரோஜா செய்த காரியம்தான்.. தூய்மை பணியாளர்கள் பலர் முன்வந்து தங்கள் பணியை செய்து வந்தாலும் ஒருசிலருக்கு தொற்று பயம் இருக்கவே செய்கிறது.

கிருமிநாசினி
அப்படிதான் நகரி தொகுதியில் உள்ள சில தூய்மை பணியாளர்களுக்கு பயம் வந்துள்ளது. இவ்வளவுதான் அவர்களும் வீதியில் இறங்கிதான் வேலை பார்த்து வந்தனர்.. திடீரென நகரி தொகுதியில் உள்ள வடமாலை பகுதியில் ஒருவருக்கு வைரஸ் உறுதி ஆகியிருக்கிறது.. அதனால் குறிப்பிட்ட அந்த கிராமத்துக்கு மட்டும் கூடுதலாக கிருமிநாசினியை தெளிக்க நகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.

துணிச்சல்
ஆனால் தூய்மை பணியாளர்களோ பயந்தனர்.. தயங்கியபடியே நின்றனர்!! இந்த சமயத்தில் எம்எல்ஏ ரோஜா அந்த கிராமத்தில் நேரடி ஆய்வுக்கு சென்றிருந்தார்.. பணியாளர்கள் தயக்கம் காட்டுவதை புரிந்து கொண்டார்.. பிறகு தானே அங்கிருந்த கிருமிநாசினி மிஷினை கையில் எடுத்து தெளிக்க ஆரம்பித்துவிட்டார்.. எம்எல்ஏ-வே இப்படி துணிச்சலான காரியத்தில் இறங்கியதை பார்த்த பணியாளர்கள் உடனே வந்து அவர்களும் கிருமிநாசினி தெளித்தனர்.

கர்ப்பிணி பெண்
ரோஜாவின் இச்செயலில் இணைந்து, அந்த பகுதி முழுவதும் கிருமிநாசினியை தெளித்து முடித்தனர். எம்எல்ஏவே முன்மாதிரியாக இருந்து அசத்திய இந்த சம்பவம் பெரும் பாராட்டுதலை பெற்று வருகிறது.. சில தினங்களுக்கு முன்பு கூட , ஆம்புலன்ஸ் இல்லாமல் ஆஸ்பத்திரியில் ஒரு கர்ப்பிணி தவித்தபோது, ரோஜா தன்னுடைய சொந்த காரில் அப்பெண்ணை வேறு ஒரு ஆஸ்பத்திரிக்கு பிரசவத்துக்கு அனுப்பி வைத்து பாராட்டை அள்ளியதும் குறிப்பிடத்தக்கது!












Click it and Unblock the Notifications