இதுவல்லவோ மனிதநேயம்... 196 கி.மீ. நடந்தே வந்த கூலி தொழிலாளர்கள்... உதவிபுரிந்த மணப்பாறை போலீஸ்
திருச்சி: வேளாங்கண்ணியில் இருந்து ஒட்டன்சத்திரத்தை நோக்கி நடந்தே வந்த கூலி தொழிலாளர்களை மணப்பாறை காவல்துறையினர் வாகனத்தில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்து உதவினர்.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வெளியூர்களில் தங்கி கூலி வேலை பார்த்து வந்த ஏராளமானோர் கையில் பணமில்லாமல் சொந்த ஊருக்கு செல்ல வழியில்லாமல் தவித்து வருகின்றனர். ஒரு சிலர் குழுவாக இணைந்து நடந்தே சென்று சொந்த ஊரை அடைந்துவிடுகின்றனர்.

அந்த வகையில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை நோக்கி 7 பேர் நடந்து சென்று கொண்டிருந்தனர். வற்றிய தேகமும், வாடிய முகமுமாக அவர்கள் அயர்ந்து வருவதை கண்ட மணப்பாறை போலீஸார் எங்கே செல்கிறீர்கள் எங்கிருந்து இப்படி செல்கிறீர்கள் என விசாரித்திருக்கின்றனர். அதற்கு தாங்கள் வேளாங்கண்ணியில் கூலி வேலை பார்த்து வந்ததாகவும், இப்போது எந்த வேலையும் இல்லாததால் சொந்த ஊருக்கு நடந்து செல்வதாகவும் கூறியுள்ளார்கள்.
மணப்பாறை புறநகரில் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸார் இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்ததுடன், இது குறித்த தகவலை மணப்பாறை டி.எஸ்.பி. குத்தாலிங்கம் மற்றும் காவல் ஆய்வாளர் ஆகியோருக்கு தெரியப்படுத்தியுள்ளனர். அவர்களும் மனிதநேயத்தின் அடிப்படையில் கூலித் தொழிலாளர்களுக்கு உதவிபுரிய முன்வந்தனர். ஏதேனும் ஒரு வாகனத்தில் அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யக் கூறியுள்ளார் மணப்பாறை டி எஸ் பி குத்தாலிங்கம்.
இதையடுத்து சோதனை பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மார்க்கெட்டில் இருந்த லாரியை அழைத்து கூலித்தொழிலாளர்கள் 7 பேரையும் அதில் ஏற்றி சொந்த ஊர்களில் இறக்கிவிட நடவடிக்கை எடுத்தனர்.
வேளாங்கண்ணியில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு 283 கிமீ தொலைவு உள்ள நிலையில் அவர்கள் வேளாங்கண்ணியில் இருந்து மணப்பாறை வரை 196 கிமீ நடந்தே வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications