வெற்றி இறுதியானதல்ல.. தோல்வி முடிவும் அல்ல.. தொடர்ந்து நடை போட வேண்டும்!
வின்ஸ்டன் சர்ச்சில் இப்படிச் சொல்வார் - வெற்றி என்பது இறுதியானது அல்ல.. தோல்வி என்பது முடிவும் அல்ல. அதற்குப் பிறகும் நாம் எழுச்சியுடன் தொடர்ந்து நடை போடுகிறோமா என்பதுதான் முக்கியம்.
ஒரு மனிதன் வெற்றி கிடைத்த பிறகும் தொடர்ந்து அதே தீவிரத்தோடு உழைத்தால் அவன் தான் சிறந்த மனிதன். ஆனால் தோல்விக்குப் பிறகும் ஒருவன் துவண்டு போகாமல் தொடர்ந்து உழைத்தான் அவன் மாமனிதன்.
வாழ்க்கையில் வெற்றி தோல்வி சகஜமப்பா என்ற காமெடி எல்லோருக்கும் தெரியும். அது வெறும் காமெடியல்ல வாழ்க்கையின் சாராம்சமே அது தான். ஒருவன் தன் இலக்கை அடைய பல முறை முயற்சி செய்கிறான். தோல்வி வந்தாலும் அதைக் கண்டு துவளாமல் மீண்டும் மீண்டும் போராடி ஜெயித்துக் காட்டுகிறான். வெற்றி அடைந்தவன் அந்த வெற்றியை தக்க வைத்துக்கொள்ளப் போராடுகிறான்.
வீட்டுக்குள் முடக்கம்
இன்று அனைவரும் கொரோனாவால் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறோம்.பல தொழில்கள் பாதிக்கப்பட்டிருக்கிறது. சிலர் வேறு தொழிலைச் செய்து லாபம் ஈட்டுகின்றனர். எப்படி என்கிறீர்களா. உங்களுக்கு தையல் தெரியுமா அப்போ வீட்டிலேயே மாஸ்க் தயாரித்து விற்பனை செய்யுங்கள். சானிடைசரும் வீட்டிலேயே தயாரிக்கலாம். அதன் மூலம் வருமானம் ஈட்டலாம். உங்கள் வீட்டில் இடம் இருந்தால் கீரை வாழைமரம் போன்றவற்றை வளர்க்கலாம். இப்படி எத்தனையோ வழிகளில் லாக்டவுன் நேரத்திலும் நம் வாழ்க்கைப் பாதையை வெற்றிப் பாதையாக மாற்றலாம்.
புதுப் புது விஷயங்கள்
ஆனந்த் மஹிந்திரா இவரைத் தெரியாதவர் யாருமே இருக்க முடியாது. அவர் கார் உற்பத்தியில் புது புது உத்திகளைக் கையாண்டு பல முறை தோல்வியடைந்தார். எத்தனையோ லட்சம் நஷ்டம் ஆனாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் தன் புது ரக கார் தயாரிப்பில் கவனம் செலுத்தினார். அதில் வெற்றியும் பெற்றார். அதோடு அவர் ஓய்ந்து விடவில்லை. வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ள இன்றும் போராடி வருகிறார். புது புது விஷயங்களை கார் தயாரி்ப்பில் புகுத்தி இன்று சாதனையாளராகத் திகழ்கிறார்.
கடும் முயற்சி
பள்ளியில் படிக்கும் மூன்று வயது குழந்தை படிப்பில் முதல் மதிப்பெண் பெற பெற்றோர்கள் கடுமையாக முயற்சிப்பார்கள். அந்த குழந்தை தோல்வி அடைந்தால் மீண்டும் மீண்டும் முயற்சிப்பார்கள். ஆனால் அக்குழந்தை ஒரு முறை முதல் மதிப்பெண் பெற்றால் போதும். அப்போது கிடைக்கும் பாராட்டைப் பார்த்து அடுத்தடுத்து முதல் மதிப்பெண் எடுக்க அக்குழந்தையே முயற்சி செய்ய ஆரம்பித்துவிடும்.
வெற்றிக்கனி நோக்கி
நாமும் நம் வாழ்க்கையில் தோல்வி அடைந்தால் அதைப் பற்றிக் கவலைபபடாமல் வெற்றிக்கனியை நோக்கிப் பயணியுங்கள். வெற்றிப் பெற்றவுடன் அந்த வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ள உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். வாழ்க்கையில் வெற்றிப் பாதையில் தொடர்ந்து நடை போடுங்கள்.. தொடர் முயற்சிகளே உங்களை வெல்ல வைக்கும்.