Digital MSME Scheme என்றால் என்ன? இது தொழில் முனைவோருக்கு எந்த அளவுக்கு பயன்படும்?
டிஜிட்டல் எம்.எஸ்.எம்.இ என்பது குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs) தங்களது வணிகச் செயல்பாடுகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கு, உதவுவதற்காக இந்திய அரசால் தொடங்கப்பட்ட ஒரு முயற்சியாகும். இது எம்.எஸ்.எம்.இ -க்களை நவீனமயமாக்கவும், உலகளாவிய சந்தையில் தங்களை ஒரு வலிமையான போட்டியாளராக நிலை நிறுத்திக் கொள்ளவும் தயார் செய்கிறது.

டிஜிட்டல் எம்.எஸ்.எம்.இ என்றால் என்ன?
எம்.எஸ்.எம்.இ-க்கள் பாரம்பரிய பணி முறைகளில் இருந்து விலகி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் யுக்திகளைப் பயன்படுத்தி, தங்கள் செயல்பாடுகளை மேம்படுத்திக் கொள்ள முடியும். உதாரணத்திற்கு ஒரு நிறுவனத்தின் தேவைக்கு ஏற்ப குறைந்த செலவிலான உற்பத்தி திட்டமிடல் சாப்ட்வேர்(ERP), வாடிக்கையாளர் உறவு மேலாண்மை (CRM), நிதி மற்றும் கணக்கியல் சாப்ட்வேர் போன்றவற்றை பயன்படுத்தி, அவர்களது பணியை எளிமைப் படுத்த உதவுகிறது. இதுபோன்ற டிஜிட்டல் கருவி மற்றும் ஹார்டுவேர்களுக்கு அரசு தரப்பில் இருந்து மானியமும் வழங்கப்படுகிறது.
அதோடு டிஜிட்டல் கருவிகள், சைபர் பாதுகாப்பு மற்றும் இ-காமர்ஸ் தளங்களைப் பயன்படுத்துவது குறித்து ஊழியர்களுக்கும், தொழில் முனைவோருக்கான பயிற்சியும் அரசு தரப்பில் வழங்கப்படுகிறது.
என்ன பலன்?
பொதுவாக டிஜிட்டல் பயன்பாடுகளை பயன்படுத்தி, ஆவணங்களைப் நிர்வகிப்பது மற்றும் நிதி அறிக்கைகளை தயாரிப்பது போன்ற செயல்பாடுகள், தானியங்கு மயமாக்கப்படுவதால் பணிச்சுமை குறைந்து நேரம் மிச்சமாகும். கைமுறையாக செய்யப்படும் பணிகளில் தவறுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அதையே கணினி வாயிலாக செய்யும் தவறுகள் இருக்காது. கணக்கீடுகளும் துல்லியமாக இருக்கும்.
அதோடு டிஜிட்டல் மயமாக்கலில் சந்தைப்படுத்துதலை எளிதாக வரம்பில்லாமல் விரிவுபடுத்த முடியும். இ-காமர்ஸ் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் மூலம் இந்தியாவைத் தாண்டியும், சர்வதேச அளவில் எளிதாக சென்றடைய முடியும். இது எம்.எம்.எஸ்.இ-க்களின் ஏற்றுமதி திறனையும் அதிகரிக்க உதவும்.
வாடிக்கையாளர் உறவு மேலாண்மை (CRM) கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலம், வாடிக்கையாளர் கேள்விகளுக்கு விரைவாகப் பதிலளிப்பது, தனிப்பயனாக்கப்பட்ட சேவைகளை வழங்குவது மற்றும் வாடிக்கையாளர் திருப்தியை மேம்படுத்துவது சாத்தியமாகும். அதையும் விரைவில் செய்ய முடியும். இதனால் வாடிக்கையாளர்களுடனான உறவு மேம்படும். இது நீண்ட கால வர்த்தகத்திற்கு அடித்தளமாகவும் இருக்கும்.
மொத்தத்தில் டிஜிட்டல் எம்.எஸ்.எம்.இ திட்டம் என்பது, எம்.எஸ்.எம்.இ தொழில்முனைவோருக்கு செலவைக் குறைக்கவும், உற்பத்தியை அதிகரிக்கவும், உலகளாவிய அளவில் சந்தைப்படுத்தவும், அதன் மூலம் வணிகத்தை நிலையாக வளர்க்கவும் உதவும்.
எந்த அளவுக்கு பயன்பாடு?
இந்திய எம்.எஸ்.எம்.இ -களில் 65% - 73% வரையில் ஏதோ ஒரு வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை, தங்கள் அன்றாட வணிக நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துகின்றனவாம். இதன் மூலம் சுமார் 68% - 73% வரை உள்ள எம்.எஸ்.எம்.இ-க்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்திய பிறகு தங்கள் வணிகத்தின் வளர்ச்சி அல்லது செயல்திறன் அதிகரிப்பை கண்டுள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளன.
எம்.எஸ்.எம்.இ வணிகத்தில் டிஜிட்டல் மயமாக்கலில் ஸ்மார்ட்போன் ஆதிக்கம் மிக அதிகம். சுமார் 70% எம்.எஸ்.எம்.இ உரிமையாளர்கள் ஸ்மார்ட்போன்களை தங்கள் முதன்மை வணிக சாதனமாகப் பயன்படுத்துகின்றனர்.
டிஜிட்டல் பணம் பரிமாற்றமும் எம்.எஸ்.எம்.இ -க்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. குறிப்பாக யுபிஐ-யின் ஆதிக்கம் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. சிட்பி ஆய்வறிக்கையின் படி, சுமார் 90% க்கும் அதிகமான எம்.எஸ்.எம்.இ -க்கள் இப்போது டிஜிட்டல் முறையில் பண பரிவர்த்தனை செய்யும் முறைகளை ஏற்றுக் கொண்டுள்ளனர்.
எம்.எஸ்.எம்.இ -க்கள் தங்கள் அன்றாட செயல்பாடுகளுக்கும், டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளுக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர், ஆனால் விற்பனையை அதிகரிக்க அல்லது புதிய வாடிக்கையாளர்களை அடைய (டிஜிட்டல் மார்க்கெட்டிங் மூலம்) அதன் பயன்பாடு இன்னும் குறைவாகவே உள்ளது. அதை சரியாக பயன்படுத்த தொடங்கிவிட்டால், நிச்சயம் இந்திய எம்.எஸ்.எம்.இ-க்களின் எதிர்காலம் பிரகாசமானதாக இருக்கும்.












Click it and Unblock the Notifications