வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
தில்லியில் போராட்டம் நடத்திய வழக்கறிஞர்கள் மீது போலீஸ் தடியடி: சம்பவத்தை விசாரிக்க நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷன்
டெல்லி:
கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லியில் சமீபத்தில் போராட்டம் நடத்திய வழக்கறிஞர்கள் மீது தடியடி நடத்தப்பட்ட சம்பவத்தை விசாரிக்க நீதிபதி என்.சி. கோச்சார் தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வழக்கறிஞர்களும் இந்திய நீதிமன்றங்களில் வழக்காட அனுமதிக்கும் சட்டத் திருத்தத்தையும், வழக்கறிஞர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களைப் பதிவு செய்து கொள்ளவேண்டும் என்ற விதிமுறையையும் எதிர்த்து நாடுமுழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினர்.
இக் கோரிக்கையை வலியுறுத்தி தில்லியில் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினர். பிப்ரவரி 24-ம் தேதி நாடாளுமன்றம் அருகே தர்ணா போராட்டம் நடத்திய அவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. இதில் 50-க்கும் அதிகமான வழக்கறிஞர்கள் காயமடைந்தனர். இதையடுத்து, தடியடி நடத்திய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி தில்லி வழக்கறிஞர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வழக்கறிஞர்கள் கோரிக்கையை ஏற்று, தடியடி சம்பவத்தை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷன் நியமிக்கப்படும் என்று மத்திய சட்ட அமைச்சர் ராம் ஜேத்மலானி அறிவித்தார். அதன்படி, ராஜஸ்தான் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி என்.சி. கோச்சார் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் கமிஷன் நியமிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிக்கையை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை பிறப்பித்தது.
சம்பவம் தொடர்பாக நீதிபதி கோச்சார் விசாரணை நடத்தி 3 மாதத்துக்குள் தனது அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிப்பார். தேவைப்பட்டால் இடைக்கால அறிக்கையையும் அவர் சமர்ப்பிப்பார்.
போராட்டம் நடத்திய வழக்கறிஞர்கள் மீது எந்த அளவுக்குத் தடியடி நடத்தப்பட்டது; அவ்வாறு தடியடி நடத்தப்பட்டிருந்தால் அதற்கு எந்த போலீஸ் அதிகாரி பொறுப்பு; எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க என்ன வழி என்பது குறித்து நீதிபதி விசாரணை நடத்துவார்.
யு.என்.ஐ.