வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
கிருஷ்ணா நதிநீர் தமிழகம் வராததற்கு ஆந்திர மாநில காங்கிரசாரின் கிளர்ச்சிதான் காரணம்: முதல்வர் கருணாநிதி
சென்னை:
சென்னைக்கு கிருஷ்ணா நதிநீர் வராததற்கு ஆந்திராவில் காங்கிரசார் செய்த கிளர்ச்சி தான் காரணம் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். இந்த குற்றச்சாட்டை தமாகா கடுமையாக ஆட்சேபித்தது.
சட்டசபையில் செவ்வாய்க்கிழமை தமாகா உறுப்பினர் அழகிரி பேசும்போது இப்பிரச்சினை எழுந்தது. விவாதம் வருமாறு:
அழகிரி: 96-97 ம் ஆண்டு பட்ஜெட்டிலேயே சென்னைக்கு கிருஷ்ணா நீர் வருவதாக ஆரவாரம் செய்யப்பட்டது. ஆனால் இன்னமும் வரவில்லை. எப்போதுதான் வரும்? சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் கூட நான்கு நாளைக்கு ஒருமுறை தான் குடிநீர் சப்ளை செய்யப்பட்டது.
முதல்வர்: கிருஷ்ணா நதி நீர் சென்னைக்கு வருவதை எதிர்த்து ஆந்திராவில் காங்கிரசார் நடத்திய கிளர்ச்சிகள் எத்தனை. கடந்த 4 மாதம் முன்பு கூட மறியல் நடத்தினார்கள். இடையில் மழை வறட்சி, பணிகள் இடையூறு காரணமாக தண்ணீர் வரவில்லை. விரைவில் தண்ணீர் தரவேண்டும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 15 ம் தேதிக்குள் தண்ணீர் திறந்த விடுவதாக அவர் உறுதி அளித்துள்ளார்.
அழகிரி: காங்கிரஸ் கிளர்ச்சியில் தான் தண்ணீர் வரவில்லை என்ற கருத்தை ஏற்க முடியாது. அவர்கள் சென்னைக்கு குடிநீர் தருவதை எதிர்க்கவில்லை. விவசாயத்துக்குப் பாதிப்பு இல்லாத வகையில் பார்த்துக் கொள்ளுங்கள் என்று தான் கூறினார். இதை நான் பகிரங்கரமாக விவாதிக்கத் தயார்.
அமைச்சர் துரைமுருகன்: நீங்கள் சொல்வது தவறு. நாங்களும் இதை விவாதிக்க தயார். காங்கிரஸ் தான் தடைக்கு காரணம்.
அழகிரி: அதெல்லாம் கிடையாது. அவர்கள் அப்படி கூறவில்லை.
முதல்வர்: எப்படியோ விளைவு சென்னைக்கு கிருஷ்ணா நீர் கிடைப்பதற்கு தடை ஏற்படுகிறதே.
அழகிரி: இப்பிரச்சினைக்கு அரசியல் காரணமல்ல என்று நீங்கள்தான் கூறியுள்ளீர்கள்.
முதல்வர்: அப்போது கால்வாயில் கசிவு ஏற்பட்டதால் தண்ணீர் வரத்து தடைப்பட்டது. அதனால் அரசியல் காரணமல்ல என்றேன்.
இவ்வாறு விவாதம் நடந்தது.












Click it and Unblock the Notifications