வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
கோகோ-கோலா கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: இறுதி ஆட்டத்துக்கு பாகிஸ்தான் தகுதி
ஷார்ஜா:
கோக-கோலா கோப்பைக்காக ஷார்ஜாவில் நடைபெற்று வரும் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டித் தொடரில் இறுதி ஆட்டத்துக்குப் பாகிஸ்தான் தகுதி பெற்றது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கடைசி சுற்றுப் போட்டியில் அந்த அணி தென் ஆப்பிரிக்க அணியை 67 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
திங்கள்கிழமை நடந்த போட்டியில் இந்தியாவைத் தோற்கடித்ததன் மூலம் தனது இறுதிப் போட்டிக்கான வாய்ப்பைப் பிரகாசப்படுத்திக் கொண்ட பாகிஸ்தான், அதிக நெட் ரன்விகித அடிப்படையில் தென் ஆப்பிரிக்காவுடனான போட்டியில் தோற்றாலும் இறுதிப் போட்டியில் நுழைந்துவிடலாம் என்ற நிலையில் இருந்தது.
முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட் செய்தது. தென் ஆப்பிரிக்க வீரர்களின் பந்து வீச்சைச் சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் திணறினர். காலிஸ், கேப்டன் குரோனி இல்லாத நிலையிலும், வில்லபி, குளூசனர் ஆகியோர் சிறப்பாகப் பந்து வீசி பாகிஸ்தான் வீரர்களை அவுட்டாக்கினர். இறுதியில் பாகிஸ்தான் அணி 49.2 ஓவர்களில் 168 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. யூசுப் யுகானா மட்டும் நின்று ஆடி 65 ரன்கள் எடுத்தார். இந்தியாவுக்கு எதிராக திங்கள்கிழமை நடந்த போட்டியிலும் இவர் அரை சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் தோல்வி
இது நாள் வரை பாகிஸ்தானுடன் நடந்த போட்டியில் தோல்வியே கண்டறியாத தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 169 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் களமிறங்கியது. வழக்கம் போல ஹெர்ஷல் கிப்ஸ் அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்தார். இருப்பினும் ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் ஷோயிப் அக்தர், வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் ஆகியோரது சிறப்பான பந்து வீச்சினால் தென் ஆப்பிரிக்க அணி சரிவுக்குள்ளானது.
ஷோயிப் அக்தர் தான் வீசிய ஒரு ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி தென்ஆப்பிரிக்காவை மீளமுடியாத சரிவுக்கு உள்ளாக்கினார். இறுதியில் 26.5 ஓவரில் 101 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பாகிஸ்தானிடம் முதல் முறையாக தென் ஆப்பிரிக்கா தோல்வியுற்றது.
கிப்ஸ் மட்டும்ஓரளவு நின்று ஆடி 59 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அதுவும் 5 பேர் ரன் எடுக்காத நிலையில் அவுட்டானார்கள். ஷோயிப் அக்தர் 4.5 ஓவரில் 9 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வக்கார் யூனிஸ், அப்துர் ரசாக் ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளையும் வாசிம் அக்ரம் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள இறுதிப் போட்டிக்குப் பாகிஸ்தான் தகுதி பெற்றது. முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா ஏற்கெனவே இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தது.
இப் போட்டித் தொடரில் கலந்து கொண்ட மூன்றாவது அணியான இந்தியா ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டும் வெற்றி பெற்றதால் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறவில்லை.
யு.என்.ஐ.