பிந்த்ராவுக்கு நோட்டீஸ் அனுப்ப இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு
புது தில்லி:
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறியதற்காக வாரியத்தின்முன்னாள் தலைவர் ஐ.எஸ். பிந்த்தாவுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் (ஷோ-காஸ் நோட்டீஸ்) அனுப்பவாரியத்தின் செயற்குழு முடிவு செய்துள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீதும் வாரிய அதிகாரிகள் மீதும் கூறப்படும் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்துஆராய வாரியத்தின் செயற்குழு தில்லியில் கூடியது. கூட்டத்துக்கு வாரியத் தலைவர் ஏ.சி. முத்தையா தலைமைதாங்கினார்.
கூட்டத்தின் உணவு இடைவேளையின்போது நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மீதும் வாரிய அதிகாரிகள் மீதும் பிந்த்ரா பலவிதமான ஊழல் குற்றச்சாட்டுகளைக்கூறியுள்ளார். இது தொடர்பாக, விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்ப கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது. இம் முடிவை ஏற்றுக் கொள்வதாக பிந்த்ராவும் தெரிவித்துள்ளார்.
பிந்த்ராவுக்கு நோட்டீஸ் அனுப்பவது என்பது செயற்குழுவில் எடுக்கப்பட்ட ஏகமனதான முடிவாகும். ஒரு வாரகாலத்தில் தான் கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளிக்கும்படி அந்த நோட்டீஸில் பிந்த்ரா கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார் என்றார் முத்தையா.
செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிந்த்ரா கூறியதாவது:
நான் கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து சிபிஐயிடம் சமர்ப்பித்த ஆவணங்கள் குறித்து இப்போது எதுவும்கூறமுடியாது. அவை ரகசிய ஆவணங்கள் என்பதால் அதுபற்றி வாரியத்திடமும் எதுவும் தெரிவிக்கவில்லை.
நான் வழங்கிய ஆவணங்களின் ரகசியத்தைக் காப்பாற்ற விரும்புவதால், சில விஷயங்கள் குறித்து கருத்து எதுவும்தெரிவிக்கும் நிலையில் நான் இல்லை என்றார் பிந்த்ரா.
யு.என்.ஐ.