தமிழகத்தில் இன்று
விவசாயிகள் வாங்கிய குறுகிய காலக் கடன் மீதான வட்டி தள்ளுபடி
- அமைச்சர் நேரு
திருச்சி:
விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட குறுகிய காலக் கடன் மீதான வட்டி தள்ளுபடி செய்யப்படுகிறது என்று தமிழக உணவு மற்றும் கூட்டுறவுத் துறைஅமைச்சர் கே.என. நேரு தெரிவித்தார்.
திருச்சியில் நிருபர்களிடம் செவ்வாய்க்கிழமை அவர் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு குறுகிய காலக் கடனாக சுமார் ரூ.830 கோடி வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவுச் சங்கங்கள் மூலம்வழங்கப்பட்டுள்ள இக் கடனுக்கு சுமார் ரூ.50 கோடி வட்டியாக வசூலிக்கப்பட்டு வந்தது.
விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இந்த குறுகிய காலக் கடன் மீதான வட்டி தள்ளுபடி செய்யப்படுகிறது. விவசாயிகளின் நலனைக் கருதி இனிஇந்த ரூ.50 கோடி கூடுதல் நிதிச் சுமையையும் தமிழக அரசு ஏற்கும்.
வாங்கிய கடனுக்கான அபராத வட்டியைப் பொறுத்தவரை, 60 சதவீதத்தை மாநில கூட்டுறவு வங்கிகளும் (டி.என்.எஸ்.சி.), 30 சதவீதத்தை மாவட்டமத்திய கூட்டுறவு வங்கிகளும், மீதமுள்ள 10 சதவீதத்தை கடன் கொடுத்த தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளும் ஏற்றுக் கொள்ளும்.அபராத வட்டியாக மட்டும் ரூ.91 கோடி வசூலிக்கப்படவேண்டியுள்ளது.
தற்போது மாநிலத்தில் போதுமான உணவுப் பொருள் கையிருப்பு உள்ளது. 10 லட்சம் டன் அரிசி கையிருப்பில் உள்ளது. இதை வைத்து அடுத்த 11மாதத்துக்கான தேவையைப் பூர்த்தி செய்ய முடியும் என்றார் நேரு.
யு.என்.ஐ.