தமிழகத்தில் இன்று
மாஸ்கோ:
இந்தியாவுக்கு 2 பில்லியன் டாலர் மதிப்புள்ள விமானம் தாங்கிக் கப்பலை வழங்குவது குறித்து சில நாட்களில் முடிவு செய்யப்படும் என்று ரஷியத் துணைப்பிரதமர் இலியா கிளபனேவ் கூறியுள்ளார்.
மாஸ்கோவில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அமெரிக்காவுக்கு அடுத்து உலக ஆயுத ஏற்றுமதிச் சந்தையில் இரண்டாவது இடத்தைப்பிடிக்க ரஷியாபல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த ஆண்டு 4.3 பில்லியன் டாலர் அளவுக்கு ஆயுதங்களை விற்க ரஷியா முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு 3.4 பில்லியன் டாலர் அளவுக்கு ஆயுதங்கள்விற்கப்பட்டன. அடுத்த சில ஆண்டுகளில் இந்த அளவை 6 பில்லியன் டாலர் அளவாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு 2 பில்லியன் டாலர் மதிப்புள்ள விமானம் தாங்கிக் கப்பலான "அட்மிரல் கோர்ஷ்கோவ் வழங்குவது தொடர்பாக பேச்சு நடந்துவருகிறது. இதுதொடர்பாக அடுத்த சில நாட்களுக்குள் முடிவு எடுக்கப்படும். இந்தக் கப்பலை பின்னர் இந்தியா நவீனப்படுத்தி 30 மிக் விமானங்களைப்பயன்படுத்தும் வகையில் மாற்றம் செய்து கொள்ளும்.
ஈரானுக்கு ஆயுத சப்ளை செய்வது தொடர்பாக ரஷியா, அந்நாட்டுடன் பேச்சு நடத்தி வருகிறது. இதுதொடர்பாக அமெரிக்காவின் ஒப்புதலையும் ரஷியாபெறும். 1995-ம் ஆண்டு ஈரானுக்கு ஆயுத சப்ளை செய்வதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து சப்ளை நிறுத்தி வைக்கப்பட்டது என்றார் அவர்.
ஆயுத சப்ளையில் இப்போது உலக அளவில் ரஷியா நான்காவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் அமெரிக்காவும் அதைத் தொடர்ந்து இங்கிலாந்து மற்றும்பிரான்ஸ் ஆகிய நாடுகள் உள்ளன.
ரஷிய ஆயுதங்களில் பாதியளவை சீனாவும், இந்தியாவும் வாங்குகின்றன. ரஷியாவில் 12 நிறுவனங்கள் தற்போது ஆயுத ஏற்றுமதியில்ஈடுபட்டுள்ளன. இவற்றில் அரசின் ஆயுத உற்பத்தி நிறுவனமான ரூஸ்வூர்ஸ்னியே நிறுவனம் மட்டும் 95 சதவீத ஏற்றுமதியில் ஈடுபடுகிறது.