தமிழகத்தில் இன்று
கோவை குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரண உதவி
கோவை:
கோவை குண்டு வெடிப்பில் பலியானோர் குடும்பங்களுக்கு அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி நிவாரண நிதி வழங்கினார்.
கோவையில் கடந்த 1997ம் ஆண்டு கலவரம் நடந்தது. பின்னர் 1998ம் ஆண்டு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் 60க்கும்மேற்பட்டோர் இறந்தனர். பல வர்த்தக நிறுவனங்கள் சூறையாடப்பட்டன.
இதில் பாதிப்படைந்தோர், மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு பெருமளவில் இழப்பு ஏற்பட்டது. இதற்கு அரசு நஷ்ட ஈடு வழங்கிவருகிறது.
இதன் முதல்கட்டமாக ஏற்கனவே 2 கோடியே 76 லட்ச ரூபாய் வழங்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக இன்று மாநில அச்சுத் துறை மற்றும் இளைஞர் நல விளையாட்டுத் துறை அமைச்சர் பழனிச்சாமி 104குடும்பங்களுக்கு ரூ. 2கோடியே 23 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் வழங்கினார்.
இதற்கான விழா கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் சந்தானம் கலந்துகொண்டார். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் பெற்றுக் கொண்டனர்.