தமிழகத்தில் இன்று
பெரியார் அணை விவகாரம்: த.மா.கா., காங்கிரஸ் கூட்டு போராட்டம்
தேனி (மதுரை):
முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 152 அடி ஆக உயர்த்தவேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும்தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினர் தமிழகத்தில் வெள்ளிக்கிழமை கூட்டு போராட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்ட இப் போராட்டத்தில் கலந்து கொண்ட த.மா.கா.வினருக்கு அக் கட்சித் தலைவர் ஜி.கே. மூப்பனாரும், தமிழ்நாடு காங்கிரஸ்கட்சினருக்கு அக் கட்சித் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தியும் தலைமை தாங்கினர்.
போராட்டங்களில் இரு கட்சிகளையும் சேர்ந்த சுமார் 5000 பேர் கலந்து கொண்டனர். மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக அவர்கள் கோஷமிட்டனர்.
தொண்டர்களிடையே, மூப்பனார் பேசுகையில், தமிழகத்தின் நலனைக் காக்கும் பொருட்டு தமாகாவும், காங்கிரஸும் இணைந்து நடத்திய இப்போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. இரு கட்சிகளும் தங்களது கோரிக்கையில் உறுதியாக உள்ளன. பெரியாறு அணையின் நீர்மட்டம் 152 அடியாகஉயர்த்தப்படும் வரை போராட்டம் தொடரும்.
தமிழக முதல்வர் மு. கருணாநிதி, பிரதமர் வாஜ்பாய் இருவரும் எனது நண்பர்களாக இருந்தாலும், அவர்களது தவறைச் சுட்டிக் காட்டுவது எனது கடமை.ஆகவே, தமிழக விவசாயிகள் நலனில் அக்கறை கொண்டு பெரியார் அணையின் நீர்மட்டத்தை அதிகரிக்கவேண்டும் என்றார்.
1996-ம் ஆண்டு காங்கிரஸிருந்து மூப்பனார் பிரிந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினார். அதற்குப் பிறகு தமாகாவும், காங்கிரஸ் இணைந்துமுதன்முறையாக இப்போதுதான் போராட்டம் நடத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
போராட்டங்களில் கே.வி. தங்கபாலு, குமரி அனந்தன், எஸ்.ஜி. விநாயகமூர்த்தி, பீட்டர் அல்போன்ஸ், ஜெயந்தி நடராஜன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.
யு.என்.ஐ.