தமிழகத்தில் இன்று
ஹாங்காங் சிறையில் கைதிகள் கலவரம் - 33 பேர் காயம்
ஹாங்காங்:
ஹாங்காங் சிறையில் திங்கள்கிழமை காலை கலவரம் ஏற்பட்டது. இதில் 33 பேர் காயமடைந்தனர். கலவரத்தை அடக்க போலீஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர்.
ஹாங்காங் சிறையில், போதை அடிமைகள் மறுவாழ்வு மையம் உள்ளது. இங்கு சிகிச்சை பெற்று வந்த வியாட்நாம் நாட்டைச் சேர்ந்த கைதிகளுக்கும்,ஹாங்காங் நாட்டைச் சேர்ந்த கைதிகளுக்கும், திங்கள்கிழமை காலை திடீரென்று மோதல் ஏற்பட்டது.
மோதல் முற்றி கலவரம் ஏற்பட்டது. கைதிகள் ஒருவருக்கு ஒருவர் கையில் கிடைத்த பொருட்களால் தாக்கிக் கொண்டனர். மேலும், சிறையில் இருந்தபொருட்களை எல்லாம் அவர்கள் தாக்கி உடைத்தனர்.
இதையடுத்து, கலவரத்தை அடக்க ஹாங்காங் சிறப்பு அதிரடிப் படையினர் சிறைக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கலவரத்தில் ஈடுபட்ட கைதிகள் மீதுகண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். சுமார் 7 மணி நேரத்துக்கும் மேலாக கலவரம் நீடித்தது. இதில் 13 போலீஸார் உள்பட 33 பேர் காயமடைந்தனர்.
தற்போது சிறைக்குள் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கு சிறைக்குள் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.