தமிழகத்தில் இன்று
ஜூ-ன்10, 2000
பாஞ்சாலி சபதம்
6. துரியோதனன் சகுனியிடம் சொல்வது
(தொடர்ச்சி)
விப்பிர ராதிய நால்வரு ணத்தவர் துய்ப்பவே - நல்
விருந்து செயலில் அளவற்ற பொன்செல விட்ட தும்,
இப் பிறவிக்குள் இவையொத்த வேள்வி விருந்துகள் -புவி
எங்ஙனும் நான்கண்டதில்லை எனத் தொனிபட்டதும்,
தப்பின்றி யேநல் விருந்தினர் யாருக்குந் தகுதிகள் - கண்டு
தக்கசன் மானம் அளித்து வரிசைகள் இட்ட தும்
செப்புக நீயவ் விழியற்ற தந்தைக்கு நின் மகன் - இந்தச்
செல்வம் பெறாவிடில் செத்திடுவான் என்றும் செப்புவாய். (46)
அண்ணன் மைந்தன் அவனிக் குரியவன் யானன்றோ? - அவர்
அடியவ ராகி யெமைப்பற்றி நிற்றல் விதியன்றோ?
பண்ணும் வேள்வியில் யார்க்கு முதன்மை அவர் தந்தார்? -அந்தப்
பாண்ட வர்தமைப் புல்லென எண்ணுதல் பார்த்தை யோ?
கண்ண னுக்கு முதல்உப சாரங்கள் காட்டினார் - சென்று
கண்ணி லாத்தந்தைக் கிச்செய லின்பொருள் காட்டு வாய்
மண்ணில் வேந்தருள் கண்ணன் எவ்வாறு முதற்பட்டான்! என்றன்
மாம னே! அவன் நம்மில் உயர்ந்த வகைசொல் வாய்! (47)
சந்தி ரன்குலத் தேபிறந் தேர்ந்தந் தலைவன்யான் - என்று
சகமெ லாஞ்சொலும் வார்த்தை மெய்யோவெறுஞ்சாலமோ?
தந்தி ரத்தொழில் ஒன்றுண ரும்சிறு வேந்தனை - இவர்
தரணி மன்னருள் முற்பட வைத்திடல் சாலு மோ?
மந்தி ரத்திலச் சேதியர் மன்னனை மாய்த்திட்டார் - ஐய!
மாம கத்தில் அதிதியைக் கொல்ல மரபுண் டோ?
இந்தி ரத்துவம் பெற்றிவர் வாழும் நெறிநன்றே! - இதை
எண்ணி எண்ணி என்நெஞ்சு கொதிக்குது, மாமனே! (48)
சதிசெய் தார்க்குச் சதிசெயல் வேண்டும், என் மாமனே! - இவர்
தாமென் அன்பன் சராசந் தனுக்குமுன் எவ்வகை
விதி செய் தார்? அதை என்றும் என் உள்ளம் மறக்குமோ? - இந்த
மேதினி யோர்கள் மறந்து விட்டார். இஃதோர் விந்தையே!
நீதிசெய் தாரைப் பணிகுவர் மானிடர் மாமனே! - எந்த
நெறியி னாலது செய்யினும், தாயென நின்புவி
துதிசெய் தேயடி நக்குதல் கண்டனை,மாமனே! - வெறுஞ்
சொல்லுக் கேயறு நூல்கள் உரைக்கும் துணிவெ லாம். (49)