கோவை குண்டு வெடிப்பு: வழக்கு விசாரணை ஆரம்பம்
கோவை:
கோவையில் நடந்த தொடர்குண்டுவெடிப்பு வழக்கு விசாரணை செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.
இந்த வழக்கு தொடர்பாகக் கைது செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 167 பேர்விசாரணைக்காக கோவை நீதிமன்றத்திற்கு செவ்வாய்க்கிழமை கொண்டு வரப்படுகிறார்கள்.
இதையடுத்து எந்த வித அசம்பாவிதச் சம்பவமும் ஏற்படாதபடி கோவை நகர் முழுவதும் பாதுகாப்புதீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கோவை நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கோவையில் கடந்த 98 ம் ஆண்டு பிப்ரவரி 14 ம் தேதி முதல் 17 ம் தேதி வரை நடந்த தொடர் குண்டு வெடிப்பில்58 பேர் இறந்தனர். 250 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவத்தில் உள்துறை அமைச்சர் அத்வானிஅதிர்ஷ்டவசமாய் உயிர்தப்பினார்.
இச்சம்பவம் தொடர்பாக அல்உம்மா தலைவர் பாஷா, கேரள ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த மதானி உள்பட 181பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டனர். இவர்களில் 8 பேர் குண்டுவெடிப்புச் சம்பவத்தின் தொடர் நிகழ்ச்சியாகநடந்த போலீஸ் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
167 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டு அனைவரும் கைது செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு சிறைகளில்அடைக்கப்பட்டனர்.
இவர்களில் 131 பேருக்கு ஏற்கனவே குற்றப்பத்திரிக்கை நகல்கள் வழங்கப்பட்டு விட்டன. மற்றவர்கள்குற்றப்பத்திரிக்கை நகல்களை வாங்க மறுத்து விட்டனர். இந்த நிலையில் இந்தத் தொடர் குண்டு வெடிப்பு வழக்குவிசாரணை செவ்வாய்க்கிழமை கோவை நீதிமன்றத்தில் நடக்கிறது.
இதற்காக இச்சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட 167 பேரும் கோவை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படுகிறார்கள்.அசம்பாவிதச் சம்பவம் எதுவும் ஏற்படாதவாறு நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நீதிமன்றவளாகத்தில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.