தமிழகத்தில் இன்று
கோர்ட் சம்மனைத் திருப்பி அனுப்பினார் ஜெயலலிதா
சென்னை:
கலர் டி.வி. ஊழல் வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் அனுப்பிய சம்மனை வாங்க ஜெயலலிதா மறுத்து விட்டார்.
போலீஸ்காரர் மூலம் தனது போயஸ் தோட்ட வீட்டுக்கு சம்மன் அனுப்பப்பட்டதை ஆட்சேபித்து அதை வாங்க அவர் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமப் பஞ்சாயத்துக்களுக்கும் கலர் டிவி வழங்கப்பட்டது.
இதற்காக கலர் டி.வி.க்கள் வாங்கியதில் 10 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, பாஸ்கரன், முன்னாள் அமைச்சர்செல்வகணபதி உள்பட 10 மீது தனி நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் வழக்குத் தொடர்ந்தனர்.
இவ்வழக்கை விசாரித்த தனி நீதிமன்றம் ஜெயலலிதா, சசிகலா, பாஸ்கரன் ஆகிய மூவரையும் விடுதலை செய்தது. செல்வகணபதி உள்பட 7 பேருக்கு 5ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.
ஜெயலலிதா உள்ளிட்ட மூவர் விடுதலையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில், சி.பி.சி.ஐ.டி. போலீஸார் அப்பீல் மனு தாக்கல் செய்தனர். இம்மனுவைவிசாரணைக்கு ஏற்ற உயர் நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டது.
அதன்படி சிறப்பு நீதிமன்றம் மூலம் ஜெயலலிதாவுக்குச் சம்மன் அனுப்பப்பட்டது. இந்த சம்மனை நீதிமன்ற ஊழியர் மூலம் கொடுத்தனுப்பாமல்,போலீஸ்காரரிடம் கொடுத்து அனுப்பியதை ஆட்சேபித்து அதை வாங்க ஜெயலலிதா மறுத்து விட்டார்.