தமிழகத்தில் இன்று
எங்களுக்கும் தேவை சங்கம்...கோர்ட்டில் போலீஸ்காரர் வழக்கு
சென்னை:
தமிழகத்தில் போலீஸ் சங்கம் அமைக்க அனுமதி கோரி போலீஸ்காரர் ஒருவர் தாக்கல் செய்த வழக்குத் தொடர்பாக, தமிழக அரசுக்கு சென்னைஉயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
செங்கை கிழக்கு மாவட்ட போலீஸ் சரகத்தில் உள்ள சேலையூர் காவல் நிலையத்தில் பணிபுரிபவர் போலீஸ்காரரர் மணிவண்ணன்.
போலீஸ் சங்கம் அமைக்க அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இவர் தாக்கல் செய்த மனு விவரம்:
மாநில நிர்வாகத்துக்கு உதவி புரிவதில் போலீஸ் படை முக்கிய பங்காற்றுகிறது. அமைதியாகவும், கீழ்ப்படியும் தன்மையுடனும், விசுவாசத்துடனும்பணிபுரியும் எங்களுக்கு பிரச்னைகள் வரும்போது போராடுவதற்கு அமைப்புகள் இல்லை.
போலீஸார் தங்களது பிரச்னைகளை விவாதித்துக் கொள்ளக் கூட அனுமதிப்பதில்லை. ஜனநாயக நாட்டில் ஒரு அங்கமாக இருந்தாலும் எங்கள் உணர்வுகளைவெளிப்படையாகக் கூற முடியவில்லை.
அரசு அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் உயர் அதிகாரிகளால் என்னைப் போன்ற போலீஸ்காரர்கள் பலமுறை பாதிக்கப்பட்டுள்ளனர்.
போலீஸார் சங்கம் அமைப்பது தொடர்பாக தேசிய போலீஸ் ஆணையம் விரிவாக ஆய்வு செய்து தனது பரிந்துரைகளை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது.
போலீஸாருக்கு அமைப்பு ரீதியான சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்று அந்த பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது. கேரளா, திரிபுரா, மேற்கு வங்கம்போன்ற மாநிலங்களில் போலீஸ் சங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாரும், அகில இந்திய அளவில் சங்கத்தினை துவக்கியுள்ளனர்.
தமிழகத்தில் போலீஸசாருக்கு இழைக்கப்படும் பல்வேறு கொடுமைகளை சுட்டிக் காட்டி சங்கம் அமைக்க அனுமதி தருமாறு தமிழக அரசிடம் மனுசெய்தேன். அரசு அனுமதி மறுத்து விட்டது.
ஆகவே, எனது இந்த கோரிக்கை மனுவை ஏற்று அனுமதி வழங்கும்படி தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று தனதுமனுவில் மணிவண்ணன் கூறியுள்ளார்.
இம் மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி கோவிந்தராஜன், இதுகுறித்து பதில் தருமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.