தமிழகத்தில் இன்று
பஸ் பள்ளத்தில் உருண்டு 19 மாணவர்கள் சாவு
அபோட்டாபாட் (பாகிஸ்தான்):
பள்ளி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்ததில் 19 மாணவர்கள் இறந்தனர். 37 பேர் படுகாயமடைந்தனர்.
பாகிஸ்தானிலுள்ள அபோட்டாபாட் நகரிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பகுதியில் இந்த விபத்து நடந்தது.
அபோடாபாட்-முரி ரோட்டில் இந்த பஸ் வந்துகொண்டிருந்த போது பிரேக் பிடிக்காததால் பஸ் தாறுமாறாய் ஓடி அங்கிருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
பல்வேறு பள்ளிக்கூடங்களிலிருந்து ஸ்கவுட் பயிற்சி மாணவர்கள் நாட்டிகாலி என்ற இடத்திற்கு சுற்றுலா வந்துகொண்டிருந்தபோது இவ்விபத்து நடந்தது.இதையடுத்து வேறு மூன்று பஸ்களில் வந்த மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு விட்டார்கள். விபத்தில் இறந்த மாணவர்களின் சடலங்களை மீட்கும் பணி நடந்துவருகிறது.
ஆரிப் பைலால் (14), சாட்கொய்ன் (16) ஆகியோர் பள்ளத்திலிருந்து ஏறித் தப்பித்தனர். இருவரும் பெஷாவர் பகுதியைச் சேர்ந்தவர்கள். தப்பித்த பின் அந்தப்பகுதியிலுள்ள மக்களிடம் விபத்து குறித்துக் கூறினார்கள். பின்னர் போலீசாருக்கு விபத்து குறித்துத் தெரிவிக்கப்பட்டது.
யு.என்.ஐ.