தமிழகத்தில் இன்று
பரூக்கை சாந்தப்படுத்தும் முயற்சியில் தேசிய ஜனநாயக முன்னணித் தலைவர்கள்
ஸ்ரீநகர்:
சுயாட்சி தீர்மானம் காரணமாக தேசிய ஜனநாயக முன்னணிக்கும், ஜம்மு காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லாவிற்கும் இடையே நிலவும் தர்மசங்கடமானநிலையைக் களைவதற்கான மறைமுக நடவடிக்கையில் தேசிய ஜனநாயக முன்னணித் தலைவர்கள் சிலர் ஈடுபட்டுள்ளனர்.
பரூக் அப்துல்லாவின் தாயார் பேகம் அக்பர் ஜெஹான் சமீபத்தில் இறந்தார். இதையடுத்து பிரதமர் வாஜ்பாய், உள்துறை அமைச்சர் அத்வானி, பாதுகாப்புஅமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் உள்பட பல தலைவர்கள் ஸ்ரீநகர் விரைந்தனர். ஜெஹானின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இதை பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர்கள் வெகுவாகப் புகழ்ந்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் சுயாட்சி கோரும் தீர்மானம்நிறைவேற்றப்பட்டு, இறுக்கமான சூழ்நிலை இருந்து வந்தாலும் கூட அதைப் பொருட்படுத்தாது, அனைத்துத் தலைவர்களும் ஒன்று திரண்டு வந்தது நெகிழவைப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பரூக் அப்துல்லாவை சமாதானப்படுத்தும் விதத்தில்தான் தலைவர்கள் வருகை என்றும் கூறப்படுகிறது. மேலும், சுயாட்சி தீர்மானம் தொடர்பாக பேச15-ம் தேதி டெல்லி வருமாறும், பரூக்கிற்கு பிரதமர் வாஜ்பாய் அழைப்பு விடுத்துள்ளார். இதை அப்துல்லாவும் ஏற்றுக் கொண்டுள்ளார்.
இதற்கிடையே, சுயாட்சி தொடர்பாக மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர்கள் சிலர்கூறியுள்ளனர். சுயாட்சி மூலம் மட்டுமே, காஷ்மீர் மக்களுக்கு சுய மரியாதை கிடைக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
1953-ம் ஆண்டுக்கு முன்பு இருந்த சூழ்நிலை உருவானால் மட்டுமே காஷ்மீரிகள் சுய மரியாதையுடன் நடமாட முடியும் என்று இவர்கள் கூறுகின்றனர்.சுயாட்சி உரிமை பறிபோனதால், காஷ்மீரின் பெருமையும் போய் விட்டதாக அவர்கள் கூறுகின்றனர்.
பரூக் அப்துல்லாவின் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள் அப்துல் ரஹீம் ரத்தார், முகம்மது சபி ஆகியோர் கூறுகையில், 1953-ம்ஆண்டுக்கு முந்தைய சுயாட்சி உரிமை பறிக்கப்பட்டதே, காஷ்மீர் இப்போது சந்திக்கும் பிரச்சினைளுக்குக் காரணம் என்று கூறியுள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.