தமிழகத்தில் இன்று
மிக்-21 வெடித்துச் சிதறியது: 2 விமானப்படை வீரர்கள் பலி
மித்னாபூர்:
மேற்குவங்க மாநிலம் மித்னாபூர் அருகே இந்திய விமானப்படைக்குச் சொந்தமான மிக்-21 ரக விமானம் அடர்ந்த காட்டில் விழுந்து நொறுங்கியது.இதில் விமானத்தில் இருந்த இரண்டு விமானப்படை வீரர்கள் இறந்தனர்.
கலைகுண்டா விமான தளத்திலிருந்து வியாழக்கிழமை இரவு வழக்கமான பயிற்சிக்காக இந்த விமானம் கிளம்பிச் சென்றது. விமானத்தில் விங்கமாண்டர் ஏ.கே.முர்காய், ஸ்குவாட்ரன் லீடர் வி.கே.ஸ்ரீவத்சா ஆகியோர் இருந்தனர்.
கிளம்பிய சிறிது நேரத்திலேயே இரவு 8 மணியளவில் அருகிலிருந்த காட்டில் விழுந்து நொறுங்கியது. விமான தளத்திலிருந்து தெற்குப் பகுதியில் ஆறுகிலோமீட்டர் தூரம் வரை மட்டுமே விமானம் சென்றிருந்த நிலையில் விபத்து ஏற்பட்டது.
விமானம் வானிலேயே வெடித்துச் சிதறியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இரு விமானப்படை வீரர்களும் இதில் உயிரிழந்தனர்.
விபத்து குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கலைகுண்டா விமான தள அதிகாரிகள் தெரிவித்தனர்.
யு.என்.ஐ.